அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பகிரங்க பேச்சுக்கு தான் தயார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வெளிவரும் தி இந்து பத்திரைகைக்கு வழங்கிய செவ்வியிலேயே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள், இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது தொடர்பில் தான் அதிருப்தி அடைந்திருப்பதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என்றும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தின் போது இந்திய பிரதமரைச் சந்தித்து பேசவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியமிருப்பதாக வெளியாகும் செய்திகள் மறுப்பதற்கில்லை என்றும் ஜனாதிபதி இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.