Ad Widget

வடக்கு, கிழக்கில் விகாரைகளைப் பாதுகாக்க விசேட நிகழ்ச்சித்திட்டம்

மூன்று தசாப்தகால யுத்தத்தின் காரணமாக அழிவடைந்துள்ள வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் உள்ள பௌத்த விகாரைகளின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு, முப்படையினரின் பங்களிப்புடன் விசேட நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தெரிவித்துள்ளார்.

பௌத்த விகாரைகள் மட்டுமன்றி, தொல்பொருள் முக்கியத்துவமிக்க இடங்களைப் பாதுகாப்பதற்கு சிவில் பாதுகாப்பு படையினரின் பங்களிப்புடன் ஒரு விசேட நிகழ்ச்சித்திட்டத்தை இவ்வருடம் முதல் ஆரம்பிப்பதற்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள பௌத்த விகாரைகளின் அபிவிருத்திக்காக, நன்கொடை வழங்கும் நிகழ்வு, ஜனாதிபதி மாளிகையில் திங்கட்கிழமை (02) இடம்பெற்றது.

இந்த நிகழ்வில், கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். சிறந்ததோர் சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு சட்டத்தினால் மட்டும் முடியாது. அவ்வாறான சமூகத்தை கட்டியெடுப்புவதற்கு பௌத்த தத்துவம் பெரும் பலமாக உள்ளது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

பௌத்த சாசனத்தின் மேம்பாட்டுக்காக அனைத்து கடமைகளையும் நிறைவேற்றுவதற்கு தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இலங்கை தாய்நாட்டை ஒரு சிறந்த நாடாகக் கட்டியெழுப்புவதற்கு மகாசங்கத்தினர் வழங்கும் தலைமைத்துவத்தை நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.

குறைந்த வசதிகளையுடைய விகாரைகளின் அபிவிருத்திக்கு, பௌத்த மறுமலர்ச்சி நிதியத்தின் கீழ், 107 மில்லியன் ரூபாய் இதன்போது பகிர்ந்தளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Posts