Ad Widget

யாழ். மாநகரின் மத்திய பகுதி முடங்குகிறது- விசேட கலந்துரையாடலில் தீர்மானம்!

யாழ்ப்பாணம் மாநகரின் மத்திய பகுதியை முடக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் இதுகுறித்த அவசர கலந்துரையாடல் நேற்று (வியாழக்கிழமை) மாலை யாழ். அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது, சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

இதன்படி, யாழ். மத்திய பேருந்து நிலையம் கோட்டைப் பகுதிக்கு தற்காலிகமாக மாற்றப்படுகிறது.

அத்துடன், யாழ்ப்பாணம் மாநகரின் வேம்படிச் சந்தியில் இருந்து மின்சார நிலையம் அமைந்துள்ள பகுதியும், மின்சார நிலைய வீதியில் கே.கே.எஸ்.வீதியிலிருந்து வைத்தியசாலை வரையும் மூடப்படவுள்ளது.

மேலும், கே.கே.எஸ். வீதி சத்திரச் சந்தியிலிருந்து முட்டாஸ் கடைச் சந்தி வரையும் மூடப்படவுள்ளதுடன் குறித்த பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களும் மூடப்படுகின்றன.

இதேவேளை, யாழ்ப்பாணம் மாநகரில் பாடசாலைகளில் தொற்று அடையாளம் காணப்பட்ட மாணவர்கள் பயிலும் வகுப்புகள் மாத்திரம் 10 நாட்களுக்கு இடைநிறுத்தப்படுகின்றன.

மேலும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மண்டபங்களில் திருமண நிகழ்வுகள், ஏனைய நிகழ்வுகள், கூட்டங்கள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்படுவதுடன் சுகாதார மருத்துவ அதிகாரியின் அனுமதியுடன் வீடுகளில் நிகழ்வுகளை நடத்த அனுமதிக்கப்படுகிறது.

அத்துடன், உயிரிழந்தோரின் இறுதிக் கிரியைகளுக்கு 25 பேர் மாத்திரம் அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts