Ad Widget

யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விடுத்துள்ள எச்சரிக்கை!

இன்றிலிருந்து வெளி மாவட்டத்திற்கான அனைத்து பேருந்து சேவைகளும் நெடுந்தூர பேருந்து நிலையத்தில். மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மாகாண ஆளுநரின் தீர்மானத்தினை நடைமுறைப்படுத்த அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்ணான்டோ தெரிவித்தார்.

நெடுந்தூர பேருந்து நிலையத்தில் இ.போ.ச பேருந்துகள் சேவையில் ஈடுபடாத நிலையில் மத்திய பேருந்து நிலையத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சாரதி நடத்துநர்களுடன் கலந்துரையாடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அண்மையில் புதிதாக திறக்கப்பட்ட நெடுந்தூர பேருந்து நிலையத்தில் இன்றிலிருந்து அரச மற்றும் தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறுவதை உறுதிப்படுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, குறித்த தீர்மானத்தினை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு பொலிசாராகிய எமக்குள்ளது எனவே அரச மற்றும் தனியார் பேருந்துகள் இன்றிலிருந்து புதிதாக திறக்கப்பட்ட நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து சேவையாற்ற வேண்டும் என தீர்மானிக்கபட்டது.

தனியார் பேருந்துகள் இன்று காலையிலிருந்து சேவையில் ஈடுபட ஆரம்பித்து விட்டன. எனினும் இலங்கை போக்குவரத்து சபை பஸ் மட்டும்தான் சேவையில் ஈடுபட வில்லை. எனவே வடக்கு மாகாண ஆளுநருடன் இடம்பெற்ற பல்வேறுபட்ட கூட்டங்களின் போது இலங்கை போக்குவரத்து சபையின் உயர் அதிகாரிகள் அழைக்கப்பட்ட போதும் அவர்கள் கலந்து கொள்ளவில்லை.

இன்றைய தினம் குறித்த தீர்மானம் தொடர்பில் தங்களுக்கு அறிவிக்கப் படவில்லை என இ,போ,ச சாரதி நடத்துனர்கள் தெரிவிக்கின்றார்கள் இதில் என்ன குழப்பம் என்று எனக்குத் தெரியவில்லை.

எனினும் பொதுமக்களுக்கான சரியான சேவையினை வழங்கும் முகமாக வடக்கு ஆளுநரால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அரச மற்றும் தனியார் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் எனவும் எனினும் நாளைய தினத்தில் இருந்து கட்டாயமாக புதிய நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து அனைத்து பேருந்து சேவைகளும் இடம்பெறும் எனவும் தெரிவித்தார்.

Related Posts