Ad Widget

போர்க் குற்ற விசாரணை: உள்ளூர் பொறிமுறைக்காக புதிய சட்டங்களை உருவாக்கத் தீர்மானம்!

“போர்க் குற்றங்கள், மனித உரிமைகள் மீறல் தொடர்பில் விசாரணை நடத்துவதாக ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலுக்கு இலங்கை உறுதியளித்தது.

இதற்கான உள்ளூர் பொறிமுறையை உருவாக்க புதிய அரசியல் சட்டங்கள் அவசியம். இதனால் அச்சட்டங்களை உருவாக்குவது தொடர்பில் சகல தரப்புக்களுடனும் அரசாங்கம் பேச்சுக்களை நடத்துகிறது” – இவ்வாறு நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த நேர்காணலிலேயே இந்த விவரங்களை அவர் தெரிவித்தார்.

அந்த நேர்காணலில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

உள்ளூர் பொறிமுறையை உருவாக்குவது தொடர்பில் நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல கட்சித் தலைவர்களுடனும் பேச்சு நடத்துகின்றோம்.

ஏனெனில் இந்த விடயத்தை நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும். பிற நாடுகளில் சர்வதேச நீதிபதிகள், வழக்கறிஞர்கள், புலனாய்வாளர்கள் இணைந்து கலப்பு நீதிமன்றங்கள் எவ்வாறு வெற்றிகரமாக செயற்பட்டன என்பதை அறிந்து அந்த நடைமுறைகளை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு வரைய வேண்டும்.

இலங்கை அரசாங்கம் நடத்தும் விசாரணைகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக இருக்க வேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் ஆணையாளர் கடந்த வாரம் தெரிவித்திருந்தார். அதன்படி முன்னெடுக்கப்படும் விசாரணைகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையளிப்பனவாக இருக்கும் – என்றார்.

Related Posts