Ad Widget

ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு இரணைதீவு பொருத்தமான இடமில்லை – டக்ளஸ்

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு இரணைதீவு பொருத்தமான இடமில்லை என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழப்பவர்களின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த தீர்மானம் சிறுபான்மை மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை தொடர்புகொண்ட கடற்றொழில் அமைச்சர் குறித்த விடயம் தொடர்பாக கலந்துரையாடினார்.

இதன்போது, இரணைதீவு பிரதேசத்தில் நீண்ட இடைவேளைக்குப் பின்னர் மக்கள் குடியேறுவதற்கு ஆர்வம் செலுத்தி வருவதையும் கடற்படையினர் அங்கு நிலைகொண்டு இருப்பதையும் கடற்றொழில் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இரணைதீவு கடலட்டை ஏற்றுமதிக் கிராமத்தின் ஊடாக வருடந்தோறும் சுமார் 25,000 அமெரிக்க டொலருக்கு மேற்பட்ட அந்நியச் செலாவணியை பெற்றுக்கொள்வதற்கும் திட்டமிடப்பட்டள்ள நிலையில், குறித்த தீர்மானம் தேவையற்ற அசௌகரியங்களை ஏற்படுத்தும் எனவும் எடுத்துரைத்துள்ளார்.

குறித்த கருத்துக்களை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் செவிமடுத்ததுடன், மாற்று ஏற்பாடு தொடர்பாக ஆராய்வதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளமையினால், சிறுபான்மை மக்களின் உணர்வுகளை பாதிக்காத வகையிலான இறுதித் தீர்மானத்தினை அரசாங்கம் மேற்கொள்ளும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை வெளியிட்டுள்ளளார்.

Related Posts