Ad Widget

சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக சட்டங்கள் கடுமையாக்கப்படும்

நாட்டில் இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும் சிறுவர்களையும் மகளிர்களையும் பாதுகாப்பதற்குமான சட்டத்தை மிகவும் கடினமாக்கப்படவேண்டும் என்று மகளிர் மற்றும் சிறுவர்கள் அபிவிருத்தி அமைச்சர் சந்திராணி பண்டார தெரிவித்தார்.

santhera-rani

இசுருபாயவில் அமைந்துள்ள மகளிர் மற்றும் சிறுவர்கள் அபிவிருத்தி அலுவலகத்தில் தனது கடமைகளை நேற்று செவ்வாய்க்கிழமை (15) பொறுப்பேற்று கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

‘தாயின் அரவணைப்பில் இருக்கவேண்டிய செயா சந்தவமியின் இழப்பு எவராலும் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றாகும். இவ்வாறான கொடூரச்செயல்கள் இனியும் நடப்பதை தடுப்பதற்கு கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்படவேண்டும்.

செயா சந்தவமியின் மரணத்துக்கு காரணமானவர்கள் யார் என்பது கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், எந்தவொரு மன்னிப்பும் வழங்கப்படாது, கடுமையான தண்டனை வழங்கவேண்டிய பொறுப்பு என்னிடம் உண்டு என்பதை உறுதியாக தெரிவிக்கின்றேன்’ என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் குற்றவாளிக்கு சட்டத்திலிருந்து தப்பவிடாது, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நீதியமைச்சு ஆகியோருடன் இணைந்து, தகுந்த தண்டனை பெற்றுக்கொடுக்கபடுவது மட்டுமல்லது, இனி இப்படியானதொரு சம்பவம் நாட்டில் இடம்பெறுவதற்கு எப்போது இடமளிக்கமாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதன்போது, மகளிர் மற்றும் சிறுவர்கள் அபிவிருத்தி பிரதியமைச்சர் விஜயகலா மகேஷ்வரனும் கலந்துகொண்டிருந்தார்.

Related Posts