Ad Widget

சிங்கள எதிர்க்கட்சி தலைவர் செய்வதை சிங்கள மக்களுக்கு செய்வேன் – சம்பந்தன்

ஒரு சிங்கள எதிர்க்கட்சித் தலைவர் சிங்கள மக்களுக்கு என்ன செய்வாரோ அவையனைத்தையும் நான் செய்வேன் என்று புதிய நாடாளுமன்றத்துக்கு எதிர்க்கட்சித் தலைவராக நேற்று வியாழக்கிழமை (03) தெரிவு செய்யப்பட்ட இரா. சம்பந்தன், தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்படுவதாக நாடாளுமன்றம் நேற்று வியாழக்கிழமை கூடியபோது சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார்.

எதிர்க் கட்சித் தலைவராக இரா.சம்பந்தன் நியமிக்கப்பட்டதன் பின்னர் நாட்டிலுள்ள சிங்கள மக்கள் குறித்த உங்களது கருத்து யாது என்று , பிபிசி சந்தேஷிய ஊடகவியலாளர் ஒருவரால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஒருநாளும் நாம் நாட்டைப் பிரிக்கமாட்டோம். நாட்டைப்பிரிப்பதற்கு நாம் எதிரானவர்கள், அதனை நாம் விரும்புவதும் இல்லை. ஏன் பிரிக்கவேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை. அவ்வாறான எண்ணம் இருக்கும் பட்சத்தில் அதனை மறந்துவிடுமாறும் அவர் கூறினார்.

மேலும், தமிழ் சமூதாயம் தற்போது எதிர்பார்க்கும் அரசாங்கம் பற்றிய தங்களது கருத்து யாது என்று கேட்டபோது, அதற்கான ஒரு தீர்மானம் கொண்டுவரப்படும். அனைவரும் சேர்ந்து ஒன்றாக வாழக்கூடியவாரான ஒரு தீர்மானமே கொண்டுவரப்படும் என்று அவர் தெரிவித்தார்.

தமிழர் ஒருவருக்கு 32 வருடங்களுக்கு பின்னர், எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Posts