Ad Widget

ஏழாலைப் பகுதியில் இளைஞர்கள் அட்டகாசம்!

குறிப்பிட்ட சில இளைஞர்களின் நடவடிக்கைகள் காரணமாக ஏழாலை, மல்லாகம் பகுதிகளில் இரவு நேரத்தில் மக்கள் நடமாடவே அச்சம் கொண்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஒரு வாரமாக வீதியால் செல்பவர்களை தாக்குவது, வீடுகளுக்கு கல்லெறிவது, வீதியோரங்களில் உள்ள கழிவுப்பொருள்களை எடுத்து நடுவீதியில் போடுவது போன்ற நடவடிக்கைகள் காரணமாக பொது மக்கள் இரவு வேளைகளில் நடமாடுவதையும் தவிர்த்து வருகின்றார்கள்.

அச்சம் காரணமாக பொதுமக்கள் இச்சம்பவங்கள் தொடர்பாக பொலிஸ் நிலையம் சென்று முறையிடவும் தவிர்த்து வருகின்றனர். இதுவே இத்தகையவர்களின் அடாவடித்தனமான நடவடிக்கைகளுக்கு ஏதுவாக அமைகின்றது. இரவு நேரத்தில் தேவையற்ற வகையில் வீதியோரங்களில் இருப்பவர்கள், நடமாடுபவர்கள் விடயத்தில் பொலிஸார் உரிய கவனம் எடுத்தால் இத்தகைய செயல்களை கட்டுப்படுத்த முடியும் என பொதுமக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இதுபோலவே யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளிலும் பொது இடங்களில் மது அருந்துவிட்டு வீதியால் செல்பவர்களை தகாத வார்த்தைகளால் பேசுவது, தாக்குவது போன்ற செயல்கள் இடம்பெறுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts