Ad Widget

உள்ளக சுயநிர்ணயக் கோட்பாட்டின் அடிப்படையில் அதிகூடிய அதிகாரப் பரவலாக்கல் அமையவேண்டும் – கூட்டமைப்பு

ஓர் ஐக்கிய, பிரிபடாத மற்றும் பிரிக்கமுடியாத நாடு என்ற வரையறைக்குள் தீர்வொன்றை காண்பதற்கு நாம் விரும்புகின்றோம். எனினும், அது இயன்றவரை அதிகூடிய அதிகாரப் பரவலாக்கத்திற்கு இட்டுச் செல்லும் உள்ளக சுயநிர்ணயக் கோட்பாட்டின் அடிப்படையிலானதாக அமைந்திருக்க வேணடும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

புதிய அரசியலமைப்பொன்றை வரைவதற்கான வல்லுநர் குழுவுக்கு அனுப்பிவைத்த கடிதத்திலேயே கட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் இணைத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பில் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

இலங்கைக்கான ஒரு புதிய அரசியலமைப்பிற்கான எமது 2020 டிசெம்பர் 28 ஆம் திகதிய ஆலோசனைகள், உங்களது அழைப்பின்பேரில் 2021 பெப்ரவரி 20ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தின் மஞ்சல் அறையில் இடம்பெற்ற எமது இரண்டு மணி நேர சந்திப்பு மற்றும் 2021 பெப்ரவரி 24ஆம் திகதியிடப்பட்ட எமது கடிதம் ஆகியன தொடர்பாக நாம் இதனை எழுதுகின்றோம்.

இது தொடர்பாக எமது ஒத்துழைப்பை வழங்குதாக நாம் தெரிவித்திருந்தமைக்கு இதுவரை எமக்கு எதுவித பதிலும் கிடைக்கப்பெறவில்லை.

நாட்டிற்கான புதியதோர் அரசியலமைப்பில் தீர்த்து வைக்கப்படவேண்டிய மிக முக்கியமான விடயம் தமிழ்த் தேசியப் பிரச்சினையேயாகும் என்றபோதிலும், ஜனாதிபதி உங்களுடைய குழுவை நியமித்தபோது எங்களோடு கலந்தாலோசிக்கவில்லை என்பது கவனிக்கத் தக்கதாகும். எனினும், உங்கள் குழு பொது மக்களிடமிருந்து ஆலோசனைகளைக் கோரியபோது, நாம் அந்நடைமுறையில் மிக ஆக்கபூர்வமாக ஈடுபட்டு எமது ஆலோசனைகளை அனுப்பி வைத்தோம். அதன் பின்னர் உங்களது அழைப்பின்பேரில் நாம் உங்களைச் சந்தித்து, தமிழ்த் தேசியப் பிரச்சினையைத் தீர்த்து வைக்க வேண்டியதன் அவசியம் தொடர்பாகவும் கடந்த 33 ஆண்டுகளில் எட்டப்பட்ட கருத்தொருமைப்பாட்டு விடயங்களை இனங்காண்பதில் உங்களது குழுவோடு இணைந்து செயற்படுவதற்கான எமது விருப்பம் தொடர்பாகவும் மேலும் விரிவாக எடுத்துரைத்தோம்.

ஏற்கெனவே வாய்மூலமாகவும் எழுத்துமூலமாகவும் உங்களுக்கு அறிவிக்கப்பட்டவாறு, ஓர் ஐக்கிய, பிரிபடாத மற்றும் பிரிக்கமுடியாத நாடு என்ற வரையறைக்குள் தீர்வொன்றை காண்பதற்கு நாம் விரும்புகின்றோம். எனினும், அது இயன்றவரை அதிகூடிய அதிகாரப் பரவலாக்கத்திற்கு இட்டுச் செல்லும் உள்ளக சுயநிர்ணயக் கோட்பாட்டின் அடிப்படையிலானதாக அமைந்திருக்க வேணடும்.

இது, இந்த நாட்டின் அனைத்து மக்களுக்கும் ஏற்றுக்கொள்ளத்தக்கதோர். அரசியலமைப்பை வகுக்கும் உன்னத பணியில் உங்களோடு ஒத்துழைப்பதற்கான எமது விருப்பை வெளிப்படுத்தலின் ஒரு நினைவூட்டலாகும்.

இரா. சம்பந்தன் நா.உ.
தலைவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர்

ஓப்பம். மாவை எஸ். சேனாதிராஜா
தலைவர், இலங்கை இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணைத்தலைவர்

ஒப்பம்: செல்வம் அடைக்கலநாதன், நா.உ.
தலைவர், தமிழீழ விடுதலை இயக்கம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணைத் தலைவர்

ஒப்பம்: டீ. சித்தார்த்தன், நா.உ
தலைவர், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணைத் தலைவர்

பிரதி: ஜனாதிபதி, கோத்தாபய ராஜபக்ஷ

பிரதமர், மகிந்த ராஜபக்ச

எதிர்க் கட்சித் தலைவர், சஜித் பிரேமதாச

ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம், எண்டோனியோ குட்டேரஸ்

மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையாளர்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள்

Related Posts