Ad Widget

இரணைதீவில் ஜனசாக்களை அடக்கம் செய்யும் தீர்மானத்தை உடனே திரும்பப் பெறவேண்டும்- மாவை

இரணைதீவில் ஜனசாக்களை அடக்கம் செய்யும் தீர்மானத்தை உடனே திரும்பப் பெறவேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“இலங்கையிலும் கொரோனா வைரஸ் தொடர்ந்து தீவிரமடைந்து பரவி வருகிறது. இதனிடையே கொரோனா வைரஸ் நோயினால் மரணமடைந்த முஸ்லிம் மக்களின் ஜனசாக்களை எங்கே அடக்கம் செய்வதென்பதில் மேலும் குழப்பமான இன, மத முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துவருவதைக் கண்டிக்க வேண்டும்.

முஸ்லிம்களின் ஜனசா அடக்கம் செய்யும் பிரச்சினை தீர்ந்து விட்டது. மனித உரிமைப் பேரவை அறிக்கையிலிருந்து இப்பிரச்சினையை நீக்கிவிடுமாறு அரசாங்கம் ஐ.நா.வில் கோருகின்றது.

இக்கோரிக்கையானது, மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பிரேரணை தொடர்பில், முஸ்லிம் நாடுகளின் வாக்குகளைக் கவருவதற்காகும். இம்முயற்சியானது, முஸ்லிம் மக்களையும் நாடுகளையும் ஏமாற்றும் முயற்சியாகும்.

கொரோனாவினால் மரணமடைந்த ஜனசாக்களை கிளிநொச்சி-பூநகரிப் பிரதேசத்திலுள்ள இரணைதீவில் அடக்கம் செய்வதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை அங்குள்ள மக்களும் கிறிஸ்தவ மதத் தலைவர்களும் இஸ்லாமிய மதத் தலைவர்களும்கூட எதிர்த்துப் போராடுகின்றனர்.

கொரோனா வைரஸ் தொடர்பான மருத்துவ நிபுணர்குழுவும் இரணைதீவைக் குறித்துச் சொன்னதாக இல்லை. அக்குழுவின் சிபார்சுகளில் முஸ்லிம் மக்களின் இறப்பு கொரோனாவில் இடம்பெற்றால் ஜனசாக்களை அந்தந்த இடங்களில் அடக்கம் செய்யலாம் என்றே அறிவித்துள்ளது.

அவ்வாறிருக்க அரசாங்கம் ஏன் இந்தத் தவறான முடிவை எடுத்தது? இரணைதீவில் ஜனசாக்களை அடக்கம் செய்வதற்கு யாரின் சிபார்சு பெறப்பட்டது?

எனவே, அரசாங்கம் இரணைதீவில் கொரோனா ஜனசாக்களை அடக்கம் செய்ய எடுத்த தீர்மானத்தை உடனே திரும்பப் பெறவேண்டும். பதிலாக அரசாங்கம் இஸ்லாமிய மதத் தலைவர்களுடன் கலந்தாலோசித்துப் பொருத்தமான இடங்களில் கொரோனாவினால் மரணமடைந்த ஜனசாக்களை இஸ்லாமிய மத ஆராதனையுடன் நல்லடக்கம் செய்வதற்கு அறிவிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts