Ad Widget

இந்திய பிரதமரை விக்னேஸ்வரன் சந்திக்க இலங்கை அரசின் அனுமதி அவசியம்

இலங்கையின் வடமாகான முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க வேண்டுமானால் அவர் அதற்கான அனுமதியை இலங்கை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்வது அவசியம் என்று இலங்கை அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

Keheliya-Rambukwella

இலங்கை அமைச்சரவை தீர்மானங்களை அறிவிப்பதற்காக நேற்று வியாழக்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு கூறினார்.

இலங்கை அரசியல் யாப்புக்கு அமைய உயர்பதவி வகிக்கும் அரச அதிகாரிகள் வெளிநாடு செல்லும்போது அரசிடம் முன்அனுமதி பெற்றுக்கொள்வது அவசியமென்று தெரிவித்த ரம்புக்வெல்ல மாகாண அமைச்சரொருவர் வெளிநாடு செல்லும்போது அவர் முதலமைச்சருக்கு அறிவிக்க வேண்டுமென்று தெரிவித்தார்.

அதே போலவே மாகாண முதலமைச்சர் வெளிநாடு செல்லும்போது அதற்கான அறிவித்தலை மாகாண ஆளுநரிடம் சமர்ப்பிக்க வேண்டுமென்றும் கூறினார் அமைச்சர் ரம்புக்வெல்ல.

வடமாகான முதலமைச்சர் இவ்வாறான வேண்டுகோளொன்றை சமர்ப்பித்தால் எடுக்கப்படவுள்ள தீர்மானம் குறித்து கேட்டபோது அதனை தற்போது கூறமுடியாது என்று பதிலளித்த ரம்புக்கவெல்ல, அதற்கான வேண்டுகோள் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அதுகுறித்து ஆராய்ந்து தகுந்த தீர்மானம் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் இந்திய பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்தியமை சம்பந்தமாக இலங்கை அரசுக்கு எந்தவிதமான சிக்கலும் இல்லை என்று கூறிய அமைச்சர் இந்திய பிரதமரின் நிலைப்பாடு தொடர்பாக அரசாங்கம் தெளிவாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்திய பிரதமருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின்போது அரசாங்கத்திற்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பிப்பதற்கான அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளமை சம்பந்தமாக கேட்டபோது, தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பிக்க முடியுமென்று கூறிய அமைச்சர் ரம்புக்வெல்ல, ஆதற்கு முன்
13ஆவது அரசியல் திருத்த சட்டம் தொடர்ப்பாக நாடாளுமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்வுக்குழுவில் மாத்திரமே இந்த பேச்சுவார்த்தைகள் நடத்த முடயுமென்றும் தெரிவித்தார்.

வடமாகாணசபை உருவாக்கப்பட்ட பின்னர் அந்த மாகாணத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல. ஆனால் அமைச்சரின் இந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ள வடமாகான முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன், மத்திய அரசாங்கம் போதிய நிதி வழங்காமை காரணமாகவே வடமாகாண அபிவிருத்தி நடவடிக்கைகளை தம்மால் முன்கொண்டு செல்ல முடியாத நிலை எற்பட்டுள்ளதாக அறிவித்திருந்தார்.

Related Posts