Ad Widget

ஆவா குழுவுடன் புலிகளுக்கும் தொடர்பில்லை இராணுவத்தினருக்கும் தொடர்பில்லை-பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

ஆவா குழுவானது விடுதலைப் புலிகளிடமிருந்தோ, இராணுவத்திலிருந்தோ அல்லது அரசியல் கட்சியிலிருந்தோ தோற்றம் பெற்ற ஒன்றல்ல எனக் குறிப்பிட்டுள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன, வடக்கிலுள்ள அப்பாவி பொதுமக்களை அச்சுறுத்தி கப்பம் பெறும் ஒரு குழுவே ஆவா குழுவென குறிப்பிட்டுள்ளார்.

பியகம பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இக்குழுவை வைத்து சிலர் அரசியல் இலாபம் தேடுவதற்கு முயற்சிப்பதாக குறிப்பிட்ட அவர், குறித்த குழு தொடர்பான தகவல்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கும் ஆவா குழுவிற்கும் நேரடி தொடர்புள்ளதென அண்மையில் அமைச்சர் ராஜித குறிப்பிட்டிருந்ததோடு, தற்போது அரசாங்கத்தைக் கவிழ்க்க குறித்த குழு செயற்படுவதாக தெரிவித்திருந்தார்.

இதேவேளை, ஆவா குழுவுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில், கடந்த இரு தினங்களாக யாழ்ப்பாணத்தில் ஆறு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts