Ad Widget

அநுராதபுரத்தில் தமிழர்கள் மீதும் இந்து ஆலயங்கள் மீதும் தாக்குதல்!!

அநுராதபுரம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் மீதான தாக்குதல் மற்றும் இளைஞர் மீதான வாள் வெட்டுச் சம்பவத்துக்கு நீதி கோரி, அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தை நேற்று மக்கள் முற்றுகையிட்டனர்.

இதனால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது. தாக்குதல் குறித்து நீதி பெற்றுத் தரப்படும் எனப் பொலிஸார் உறுதியளித்ததை அடுத்து மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

அநுராதபுரம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் மீது கடந்த 11 ஆம் திகதி தாக்குதல் நடத்தப்பட்டது. ஆலயத்தின் அம்மன் சிலைகள் உடைக்கப்பட்டன. ஆலயத்தின் மூல அறையினுள் வைத்து இளைஞர் ஒருவர் வாளால் வெட்டப்பட்டார்.

தாக்குதலில் தலையில் காயமடைந்த இளைஞர் அநுராதபுரம் வைத்தியசாலையில் இன்னமும் சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவத்துடன் தொடர்புடைய 7 பேர் ஆலய நிர்வாகத்தினரால் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதில் 5 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர். அநுராதபுரம் மாவட்ட நீதிமன்றில் எஞ்சிய இருவரும் நேற்றுமுன்தினம் சரணடைந்தனர். தாக்குதலுடன் தொடர்புடைய 7 பேருக்கும், நீதிவான் பிணை வழங்கியுள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த இளைஞர் வைத்தியசாலையில் இன்னமும் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தாக்குதல் மேற்கொண்டவர்கள் என்ற சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட 7 பேரையும் பிணையில் விடுவித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமக்கான நீதி நிலைநாட்டப்படவேண்டும் எனக் கோரி ஊர் மக்கள் அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தை நேற்று முற்றுகையிட்டனர்.

நீதிமன்றத்தின் ஊடாக நீதி பெற்றுத் தரப்படும் என்று பொலிஸார் உறுதி வழங்கினர். ஆர்ப்பாட்டங்கள் எதனையும் மேற்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தியதுடன் ஏதாவது பிரச்சினை என்றால் தமக்குத் தெரியப்படுத்துமாறு குறியுள்ளனர்.

இதேவேளை, அநுராதபுரம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோயில் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துப் பலரும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

“சம்பவம் நடை பெற்று 5 நாட்களாகியும் எவரும் ஆலயத்தை வந்து பார்வையிடவில்லை. தமிழ் அரசியல் பிரமுகர்களோ, இந்து அமைப்புக்களோ இதுவரை எம்மை வந்து பார்க்கவில்லை” என்று அநுராதபுரம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

அநுராதபுரம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் மீது கடந்த 11 ஆம் திகதி இரவு தாக்குதல் நடத்தப்பட்டது. அம்மன் சிலைகள் சேதமாக்கப்பட்டதுடன், ஆலயத்தின் மூலஸ்தானத்தினுள் வைத்து இளைஞன் மீது வாள்வெட்டுத் தாக்குதலும் நடத்தப்பட்டது.

“சம்பவம் நடைபெற்று 5 தினங்கள் முடிந்து விட்டன. எவரும் வந்து பார்வையிடவில்லை” என்று ஆலய நிர்வாகத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

ஆலயம் தாக்கப்பட்டமை தொடர்பில் மாவை சேனாதிராஜா மற்றும் அகில இலங்கை இந்து மாமன்றம் ஆகிய கண்டன அறிக்கை வெளியிட்டன.

ஆனால், எவரும் எம்மை வந்து பார்க்கவில்லை. ஆலயத்தின் தாக்குதல் தொடர்பில், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கு தொலை நகல் மூலம் அறிவித்திருந்தோம். அவர்கள் வந்து

பார்வையிடுவதாக எங்களுக்குத் தகவல் தெரிவித்திருந்தனர். ஆனால், இன்று வரையில் வந்து பார்வையிடவில்லை.

இந்து சமயத்துக்குப் பொறுப்பாக இருக்கின்ற அமைச்சர் கூட எங்களை வந்து பார்வையிடவில்லை. ஆலயத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலினால் ஏற்பட்ட சேதத்தைச் சீரமைப்பதற்குக் கூட முடியாத நிலையில் உள்ளோம். எவரும் எங்களுக்கு உதவி செய்யவில்லை என்று ஆலய நிர்வாகத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்

Related Posts