சம்பூர் கடற்படை முகாம் பொதுமக்களின் விவசாய நிலத்துக்கு மாறுகிறது!

திருகோணமலை, சம்பூர் பிரதேசத்திலிருந்து கடற்படை வெளியேறுவதாக கூறியபோதிலும், மக்களின் விவசாய நிலங்களில் கடற்படை முகாம்களை அமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கடந்த மாதம் சம்பூருக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடற்படையினரின் வசமிருந்த 40 ஏக்கர் நிலப்பரப்பை மக்களிடம் கையளித்தார்.

எனினும் குறித்த பகுதியிலிருந்து கடற்படையினர் வெளியேறுவதற்கான முயற்சிகளை இதுவரை எடுக்கவில்லை என மக்கள் தெரிவிக்கும் அதேவேளை, மீள்குடியேற்றம் மந்தகதியில் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

சம்பூரில் இதுவரை விடுவிக்கப்படாத நிலப்பரப்பாக 600 ஏக்கர் காணப்படும் அதேவேளை, 820 மாணவர்கள் கல்வி கற்ற மகாவித்தியாலயம் ஒன்றும், 200 மாணவர்கள் மாணவர்கள் பயின்ற பாடசாலை ஒன்றும் குறித்த நிலப்பரப்பிற்குள் உள்ளடங்குவதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பூர் மக்கள் 2006ம் ஆண்டு இடம்பெயர்ந்து 18 முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts