இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை விசாரணைக் குழுவிடம், சாட்சியமளிக்கும் வழிமுறைகள் அடங்கிய ஆவணத்தின் மாதிரியை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, நேற்று புதன்கிழமை (03) வெளியிட்டது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்தில் புதன்கிழமை (03) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இந்த ஆவணத்தின் மாதிரி வெளியிடப்பட்டது. கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனை வெளியிட்டு வைத்தார்.
சுத்தியக் கடதாசி என்ற தலைப்பிடப்பட்டுள்ள இந்த விண்ணப்பப்படிவம் 5 பக்கங்களைக் கொண்டது. இதன் கடைசிப் பக்கத்தில், ‘1948.02.04ஆம் திகதியிலிருந்து தற்போது வரை உங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களை அல்லது நீங்கள் பார்த்த சம்பவங்களை விபரியுங்கள். முடிந்தால், சமாதான நீதவான் அல்லது சத்தியப்பிரமாண ஆணையாளர் ஒருவர் முன்னிலையில் கையொப்பமிட்டு அனுப்புங்கள். முடியாவிட்டால் நீங்கள் மட்டுமே கையொப்பமிட்டு அனுப்பலாம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.