சாது மிரண்டால் என்ன நடக்கும் என்பதை இலங்கை மக்களும், அண்மையில் தமிழ்நாட்டு மக்களும் செயலில் காண்பித்துவிட்டனர். இலஞ்ச ஊழலில் இதுவரையில் ஈடுபட்டவர்களை நாம் அடையாளம்கண்டு தண்டிப்போம் என்று கூறியே தற்போதைய தமிழக அரசும், இலங்கை அரசாங்கமும் மக்களின் ஆதரவைப் பெற்றது.

இப்போது அன்று இலஞ்ச ஊழலில் ஈடுபட்டவர்களை இந்த அரசாங்கங்கள் அடையாளம்காண விளைந்தால், அவர்கள் பழிவாங்கலில் ஈடுபட்டுள்ளார்கள் என்று கூறுகிறார்கள். இதனைப் பழிவாங்கல் என்று கூறினால், குற்றவாளிகளைப் பொலிஸார் துரத்துவதும் பழிவாங்கலே எனக் தமிழ்த்தேசியக் கூட்டணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முதல்வர் விஜய்யின் அரசும், இங்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசும் அரசியல் பழிவாங்கல்களில் இறங்கியிருப்பதாகவும், அதுபற்றிய நிலைப்பாட்டைக் கோரியும் எழுப்பப்பட்ட கேள்விக்கு அளித்திருக்கும் பதிலிலேயே விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதுபற்றி அவர் மேலும் கூறியிருப்பதாவது:
முற்பகல் செய்த வினை பிற்பகல் விளையும். இது இயற்கையின் வெளிப்பாடு. அன்று பதவியில் ஏற்றப்பட்ட அரசியல்வாதிகள் தமது பதவிகள் மக்களுக்குச் சேவை செய்வதற்காகவே மக்களாலேயே தரப்பட்டன என்பதை மறந்து, அவற்றை தம்மையும் தமது சுற்றத்தாரையும் மேம்படுத்துவதற்காகவே பயன்படுத்தினர். தமக்கு சேவை செய்வார்கள் என்று நினைத்து வாக்களித்த மக்களிடம் இலஞ்சம் பெற்றே அவர்களுக்கான சேவைகளை வழங்கினர். அரசியல்வாதி என்பவன் ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளன். அவன் மக்களின் நம்பிக்கைக்குப் பொறுப்பாகவே நடந்துகொள்ளவேண்டும்.
இதுவரை காலமும் தமிழ்நாட்டிலும் இங்கும் ஆட்சிக்கு வந்தவர்கள் தங்கள் சுயநலத்தை முன்னிறுத்தியே ஆட்சி நடத்தினர். மக்களை முட்டாள்களாக்கி அவர்களுக்குப் பணம் கொடுத்து, அவர்களின் வாக்குகளைப் பெற்றதன் பின்னர், இலஞ்ச ஊழல் நடவடிக்கைகளில் வெகுவாக ஈடுபட்டனர்.
இந்நிலையில் சாது மிரண்டால் என்ன நடக்கும் என்பதை இலங்கை மக்களும், அண்மையில் தமிழ்நாட்டு மக்களும் செயலில் காண்பித்துவிட்டனர். இலஞ்ச ஊழலில் இதுவரையில் ஈடுபட்டவர்களை நாம் அடையாளம்கண்டு தண்டிப்போம் என்று கூறியே இரு அரசாங்கங்களும் மக்களின் ஆதரவைப் பெற்றனர்.
இப்போது அன்று இலஞ்ச ஊழலில் ஈடுபட்டவர்களை இந்த அரசாங்கங்கள் அடையாளம்காண விளைந்தால், அவர்கள் பழிவாங்கலில் ஈடுபட்டுள்ளார்கள் என்று கூறுகிறார்கள். இதனைப் பழிவாங்கல் என்று கூறினால், குற்றவாளிகளைப் பொலிஸார் துரத்துவதும் பழிவாங்கலே எனக் குறிப்பிட்டுள்ளார்.