யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைத்து கடந்த 5 ஆம் திகதி ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டமைக்கும், வடமாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தனுக்கும் தொடர்பிருப்பதாகக்கூறி சயந்தனின் கொடும்பாவி நேற்று செவ்வாய்கிழமை (15) எரிக்கப்பட்டுள்ளது.
மேற்படி சம்பவத்தில் உயிரிழந்த 26 வயதுடைய எஸ்.அன்பழகனின் உறவினர்கள் மற்றும் நண்பர்களினாலேயே இந்த கொடும்பாவி எரிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்களின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு ஊர்வலமொன்று நேற்று செவ்வாய்க்கிழமை (15) மாலை 5.30 மணிக்கு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையிலிருந்து ஆரம்பித்து மீசாலைச் சந்தி வரையில் சென்றடைந்தது.
ஊர்வலத்தில் சயந்தனின் உருவப் பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்துக் கொண்டு செல்லப்பட்டது.
மேலும், ‘கைது செய், கைது செய் கொலையாளியைக் கைது செய்’, ‘கொடுக்காதே கொடுக்காதே கொலையாளிகளுக்கு மன்னிப்புக் கொடுக்காதே’, ‘கொலை புரிந்த 23 பேரில் 4 பேரைக் கைது செய்துள்ளதுடன், பிரதான கொலையாளியை கைது செய்யாததன் மர்மம் என்ன’, ‘நீதி வேண்டும், நீதி வேண்டும் அன்பழகனின் படுகொலைக்கு நீதி வேண்டும்’, ‘சட்டத்தை திருப்பாதே, சட்டத்தை திருப்பாதே, பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக சட்டத்தைத் திருப்பாதே’ ‘அரச மருத்துவமனையில் படுகொலை செய்யப்பட்ட அன்பழகனுக்கு நீதி கிடைக்குமா’ போன்ற சுலோகங்களைக் கைகளில் ஏந்தியவாறு ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் சென்றனர்.
ஊர்வலத்தின் நிறைவில் சயந்தனின் உருவப் பொம்மையினை வீதியில் போட்டு எரித்தனர்.
மேற்படி வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் பலியாகியிருந்ததுடன், 8 பேர் படுகாயமடைந்து யாழ்.போதனா மற்றும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
மீசாலைப் பகுதியிலுள்ள ஆலயமொன்றில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பின் எதிரொலியாகவே வைத்தியசாலையில் வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மீசாலையினைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டு சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.