Ad Widget

வடக்கில் மேலும் 55 பேருக்குக் கொரோனா- முல்லைத்தீவு ஆடைத் தொழிற்சாலையில் 20 பேர்!

வடக்கு மாகாணத்தில் மேலும் 55 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 642 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

அதில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஒன்பது பேருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 20 பேருக்கும் கிளிநொச்சியில் எட்டுப் பேருக்கும் வவுனியாவில் 11 பேருக்கும் மன்னார் மாவட்டத்தில் ஏழு பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில், யாழ். போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் இருந்த மூவருக்கும் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கும் ஊர்காவற்றுறை, சாவகச்சேரி மற்றும் சங்கானை பிரதேச சுகாதார அதிகாரி பிரிவுகளில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அத்துடன், முல்லைத்தீவு வைத்தியசாலையில் எட்டுப் பேருக்கும் புதுக்குடியிருப்பு சுகாதாரப் பிரிவில் ஆடைத் தொழிற்சாலையைச் சேர்ந்தவர்கள் 12 பேருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேலும், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஐவருக்கும் பளை சுகாதாரப் பிரிவில் மூவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், வவுனியாவில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வவுனியா வளாக மாணவர்கள் ஆறு பேர் உட்பட 11 பேருக்குத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஏழு பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Related Posts