Ad Widget

யாழ்.மாநகர 107 உணவகங்களில் 76 உணவகங்களில் சுகாதாரச் சீடுகேடு!!

யாழ்ப்பாணம் மாநகர எல்லைக்குட்பட்ட 107 உணவகங்கள் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால்நேற்று சோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவற்றில் 76 உணவகங்களில் சுகாதாரச் சீர்கேடுகள் காணப்பட்டுள்ளன. 12 உணவகங்களில் காணப்பட்ட நுகர்வுக்கு தகுதியற்ற உணவுகள் அழிக்கப்பட்டதுடன், 26 உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்த திடீர் சோதனை நடவடிக்கை வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் அறிவுறுத்தலுக்கு அமைய பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் முன்னெடுக்கப்பட்டன என்று ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பில் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் அறிவுறுத்தலுக்கு அமைவாக யாழ்ப்பாணம் மாநாகர சபையின் எல்லைக்குட்பட்ட 107 உணவகங்களுக்கு பொது சுகாதார அதிகாரிகள் மற்றும் உணவுக்கட்டுப்பாட்டு அதிகாரிகளால் நேற்று (06) திடீர் கண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

உணவகங்களின் தரம் மற்றும் சட்டத்திற்கமைவாக இயங்குகின்றனவா என்று மேற்கொள்ளப்பட்ட இந்த கண்காணிப்பு நடவடிக்கையின்போது 76 உணவகங்களில் சுகாதார சீர்கேடுகள் காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் அதிகளவிலான சுகாதார சீர்கேடுகளுடன் காணப்பட்ட 26 உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன் 12 உணவகங்களில் காணப்பட்ட தகுதியற்ற உணவுகள் அழிக்கப்பட்டன.

மேலும் ,சுகாதார சீர்கேடுகளுடன் காணப்பட்ட உணவகங்களுக்கு மிக தகுதிவாய்ந்த உணவகங்களாக மாற்றியமைப்பதற்கான கால அவகாசம் பொதுச் சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்பட்டதுடன் அவ்வாறு தவறும் பட்சத்தில் குறித்த உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த கண்காணிப்பு நடவடிக்கையில் ஆளுநரின் தனிப்பட்ட செயலணி உறுப்பினர்கள் 21 பேர் ஒவ்வொரு அணியையும் பிரதிநிதித்துவப்படுத்தி செயற்பட்டதுடன் எட்டு பிரிவாக 51 பொதுச் சுகாதார அதிகாரிகள் ஈடுபட்டனர்.

இந்த நடவடிக்கை குறிப்பாக நல்லூர் மகோற்சவ திருவிழாவினை முன்னிட்டு மக்களின் நலன்கருதி சுத்தமான உணவுகள் வழங்கப்படவேண்டும் என்ற நோக்கில் ஆளுநரால் அறிவுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது- என்றுள்ளது.

Related Posts