இலங்கையின் இரண்டாவது பெரிய மனிதப் புதைகுழி: எலும்புக்கூடுகள் 254 ஆக உயர்வு

இலங்கையின் இரண்டாவது பெரிய மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வு ஆரம்பமாகி எட்டு நாட்களின் பின்னர் கண்டறியப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 254 ஆக உயர்ந்துள்ளது.

செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியில் இருந்து 249 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாகவும், நேற்றைய தினம் (05 ஏப்ரல்) ஒரு குழந்தையின் எலும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் முன்னிலையாகும் மனித உரிமைகள் சட்டத்தரணி ரனிதா ஞானராஜா தெரிவித்துள்ளார்.

“ஐந்து எலும்புக்கூடுகள் சுத்தப்படுத்தப்பட்டு இலக்கம் இடப்பட்டுள்ளது. இரண்டு எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இதற்கமைய அகழ்ந்து எடுக்கப்பட்ட மொத்த எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 249. அகழ்ந்து எடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளில் ஒன்று சிறு குழந்தையினுடையது.”

மேலும் அவர், சவப்பெட்டியில் புதைக்கப்பட்டது போன்ற ஒரு எலும்புக்கூடும் தோண்டி எடுக்கப்பட்டதாகவும், எரிந்த நிலையில் இருந்த பல எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டதாகவும் கூறினார்.

அகழ்வாய்வு ஆரம்பமான நாள் முதல் இன்று வரை (05 ஏப்ரல்) புதைகுழியிலிருந்து சில நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி ரனிதா குறிப்பிட்டுள்ளார்.

“ஆரம்பித்தநாள் முதல் இன்று வரை சில நாணய குற்றிகள், தங்க ஆபரணம் எனக் கூறக்கூடிய ஆபரணம் ஒன்றும் எடுக்கப்பட்டுள்ளன.”

அகழ்வுப் பணிக்கு அரசாங்கத்திடமிருந்து 2.1 மில்லியன் ரூபாய் நிதி கிடைக்கப்பெற்றதை அடுத்து, செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வுப் பணிகள் 27 ஏப்ரல் 2026 அன்று யாழ்ப்பாண நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் ஆரம்பமானது.

நீதிமன்ற உத்தரவின் பேரில் தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரது வழிநடத்தலில் யாழ்ப்பாணம், செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் முதன்முறையாக 2025 மே 15ஆம் திகதி ஆரம்பமாகின.

45 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் 2025 செப்டம்பர் 06ஆம் திகதி மதியம் நிறைவடைந்த போது, மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் உள்ளிட்ட 240 மனித எலும்புக்கூடுகளில் ஒன்றைத் தவிர அனைத்து எலும்புக்கூடுகளும் அகழ்ந்து எடுக்கப்பட்டிருந்தன.

அகழ்வாய்விள் இரண்டாம் கட்டத்தின் போது மீட்கப்படாத மனித எலும்புக்கூடு இன்னும் மீட்கப்படவில்லை எனவும், அது பாதுகாக்கப்படுவதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி. எஸ். நிரஞ்சன், ஏப்ரல் 30, 2026 அன்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.

செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனித புதைகுழியிலிருந்து மனித எலும்புகளுடன் இதுவரை அகழ்ந்து எடுக்கப்பட்ட ஏனைய பொருட்களுள் பால் போத்தல், பொம்மை உள்ளிட்ட விளையாட்டுப் பொருட்கள், சிறுவர் காலணிகள் மற்றும் பாடசாலைப் பைகளும் உள்ளடங்குகின்றன.

28 சிறுவர்கள் உட்பட 376 மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட மன்னார் சதொச மனிதப் புதைகுழியானது இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட மிகப்பெரிய மனிதப் புதைகுழியாக கருதப்படுகிறது.

Related Posts