யாழில் அதிரடி நடவடிக்கை: டெங்கு நுளம்பு குடம்பிகள் கண்டறியப்பட்ட வீடுகளுக்கு தலா 10,000 தண்டம்!

திருநெல்வேலி பகுதிகளில் டெங்கு நுளம்பு பரவும் சூழலை பேணிய குற்றச்சாட்டில் 08 பேருக்கு 80ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்துள்ள நிலையில் திருநெல்வேலி பகுதியில் கடந்த 3ஆம் திகதி தொடக்கம் 08ஆம் திகதி வரையில் பொது சுகாதார பரிசோதகரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட கள தரிசிப்புக்களின் போது, டெங்கு நுளம்பு பரவ கூடிய சூழலை பேணியமை, வீடுகளில் நுளம்பு குடம்பிகள் காணப்பட்ட, 09 வீட்டு உரிமையாளர்கள் இனம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராக யாழ்ப்பாண மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.

குறித்த வழக்கு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது 08 உரிமையாளர்கள் மன்றில் முன்னிலையாகி தம் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதை அடுத்து அவர்களை கடுமையாக எச்சரித்த மன்று அவர்களுக்கு தலா 10ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது.

அதேவேளை மன்றில் முன்னிலையாகாத நபருக்கு அழைப்பு கட்டளை அனுப்ப மன்று கட்டளையிட்டது.

Related Posts