Ad Widget

யாழ். குடாநாட்டின் நீர் பிரச்சினைக்கு தீர்வாக பாரிய திட்டம் – ஆளுநர் அறிவிப்பு

யாழ்.குடாநாட்டின் நீர்த் தேவையை பூர்த்தி செய்வதற்கு வடமராட்சி களப்பில் இருந்து நீரை எடுப்பதற்கான பாரிய திட்டம் மிக விரைவில் நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக வட. மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகன் தெரிவித்துள்ளார்.

இது யாழ்ப்பாண மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி எனவும் அவர் கூறியுள்ளார்.

ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தொிவிக்கும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில், “இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களில் ஆறுகள், நதிகள் இல்லாத ஒரு மாவட்டம் யாழ்.மாவட்டம்.

இங்கு நிலத்தடி நீர் வற்றல் அல்லது மாசு காரணமாக நீர்த் தேவை அதிகாித்துள்ளது. இதனால் நீர் இல்லாமை என்பதற்கும் அப்பால் சுகாதார பிரச்சினைகளும் தலைதுாக்கியுள்ளது. இந்நிலையில் யாழ்.குடாநாட்டுக்கு சுத்தமான நீரை கொண்டுவருவதில் தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம்.

அதில் வடமராட்சி களப்பில் தேங்கும் மழை நீரை வெளியில் எடுத்து பாரிய குளம் ஒன்றில் அதனைத் தேக்கி பின்னர் அங்கிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரை மக்களுக்கு கொடுப்பதே இந்த திட்டம். இதற்கான சகல பணிகளும் நிறைவடைந்துவிட்டன.

தற்போது இந்த திட்டத்தினால் சுற்று சூழலுக்கு உண்டாகும் சாதக பாதகங்கள் தொடர்பாக யாழ்.பல்கலைக்கழக சமூகத்துடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த ஆய்வுகள் பொியளவில் பாதகமாக அமையாத நிலையில் மிக விரைவில் இந்த திட்டம் தொடங்கப்படும்.

இதற்காக வடமராட்சி களப்பில் தேக்கப்பட்டிருக்கும் நீரில் 18 சதவீதமான நீரை வெளியில் எடுத்து அதனை குளம் ஒன்றில் சேமிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அந்த குளம் சுமார் 9 கிலோ மீற்றர் சுற்றுளவைக் கொண்டதாகவும், சுற்று மதில் கொண்டதாகவும் அமைக்கப்படும்.

அங்கிருந்து பின்னர் சுத்தீகரிக்கப்பட்ட தண்ணீர் மக்களுக்கு விநியோகிக்கப்படும். இந்த திட்டத்திற்காக அமைக்கப்படும் குளம், யாழ்.மாவட்டத்தில் அமையும் முதலாவது மிகப்பரிய குளமாக அமையும். மேலும் இந்த குளத்தின் ஊடாக நிலத்தடி நீர்மட்டமும் உயர்வடையும் சாத்தியங்கள் உள்ளன.

இதற்கும் மேலதிகமாக 5 நீர் வழங்கல் திட்டங்கள் எங்களிடம் இருக்கின்றன. அதாவது மேம்படுத்தப்பட்ட ஆறுமுகம் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதிலும் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். அதற்காக 65 வீதமான நிதியை பெற்றிருக்கிறோம்.

மிகுதி 35 வீதமான நிதியை ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் பெறுவதற்கு திட்டமிட்டிருக்கின்றோம். அதேபோல் பாலி ஆறு திட்டம், மேல் பறங்கியாறு, கீழ் பறங்கியாறு திட்டம் மற்றும் மத்திய மாகாணம், சப்ரகமுவ மாகாணம் ஆகியவற்றிலிருந்து நிலத்தடி குழாய்கள் ஊடாக நீரை கொண்டுவரும் திட்டம் ஆகியன இருக்கின்றன. இவை தொடர்பாக ஆய்வுகளையும் நாங்கள் செய்து கொண்டிருக்கின்றோம்.

இவற்றுக்கு அப்பாலேயே இரணைமடு திட்டம் தொடர்பாக நாங்கள் சிந்திப்போம். அங்கே அரசியல் விடயங்கள் இருக்கின்றன. ஆனபோதும் அந்த மக்களுடன் நாம் தொடர்ச்சியாக பேசிக்கொண்டிருக்கிறோம். குறிப்பாக இரணைமடுக் குளத்திலிருந்து கடலுக்கு செல்லும் தண்ணீரை பணம் கொடுத்து வாங்குவதற்கும் நாம் தயாராக இருக்கின்றோம்” என்று தெரிவித்தார்.

Related Posts