Ad Widget

மூழ்கிய படகு மீட்டு தரப்படும் – மாவை

கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று காணாமல் போய் மீண்டும் கரையொதுங்கிய மீனவர்களின் மூழ்கிய படகு மற்றும் வலைகளை மீட்டுக்கொடுப்பதுடன், அந்த மீனவர்கள் தொழில் செய்வதற்கு வழி ஏற்படுத்தி கொடுப்பதாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

பருத்தித்துறை, சக்கோட்டை பகுதியை சேர்ந்த பொன்ராசா நித்தியசீலன் (வயது 31), லூசியஸ் ஜெயபாலன் (வயது 28), செபமாலை றோபேர்ம் கெனடி (வயது 36) ஆகிய மூன்று மீனவர்கள், கடந்த 28ஆம் திகதி அதிகாலை கடலுக்கு மீன்பிடிக்க சென்று காணாமல்போயிருந்தனர்.

தொடர்ந்து, 29ஆம் திகதி காலையில் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கப்பலேந்தி மாதா கோவிலடியில் மூன்று மீனவர்களும் படகுடன் கரையொதுங்கினார்கள். இயந்திரக்கோளாறு காரணமாக கரை திரும்ப முடியாமல் இருந்ததாக மூன்று மீனவர்களும் தெரிவித்தனர்.

மீனவர்கள் கரையொதுங்கியதும் அவர்களது படகு கப்பலேந்தி மாதா கோவிலடி கடற்கரையை அண்மித்த கடலில் நங்கூரமிடப்பட்டிருந்தது.

தொடர்ந்து, வீசிய காற்றால் படகு கடலுக்குள் மூழ்கியது. இதனையடுத்து அந்த மீனவர்கள் மீண்டும் தங்கள் தொழில்களை மேற்கொள்ள முடியாத சூழல் காணப்படுகின்றது.

இந்நிலையில் மூன்று மீனவர்களையும் ஞாயிற்றுக்கிழமை (30) மாலை நேரில் சந்தித்த மாவை சேனாதிராசா, மீனவர்களின் மூழ்கிய படகை மீண்டும் கடலினுள் இருந்து எடுத்து, மீண்டும் தொழில் செய்வதற்கு ஏற்ற வகையில் தயார் செய்து தருவதாக உறுதியளித்தார்.

மேற்படி 3 மீனவர்களும் பலாலி மற்றும் மயிலிட்டி பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து தற்போது தற்காலிகமாக சக்கோட்டை பகுதியில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts