முல்லையில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் மாபெரும் போராட்டம் – அனைவருக்கும் அழைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த போராட்டம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக எதிர்வரும் 7ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளதாக காணாமலாக்கப்பட்ட உறவினர்களின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் மரிய சுரேஸ் ஈஸ்வரி தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மாவட்ட செயலகத்திற்கு முன்னால் காலை 10 மணிக்கு ஆரம்பமாகி வட்டுவால் பாலத்தில் முடிவடையவுள்ள இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு, அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கைக்கு கால அவகாசம் வழங்கி, இலங்கையுடன் சேர்ந்து சர்வதேசமும் தம்மை ஏமாற்றியுள்ளதாக தெரிவித்த அவர், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பினரை நம்பியே தாம் வாக்களித்ததாகவும் அவர்கள் அரசுக்கு விலைபோயுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

எது எவ்வாறாயினும் தாம் தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts