Ad Widget

முல்லைத்தீவில் வாக்கு அட்டைகள் மறைத்து வைக்கப்பட்டமை தொடர்பாக இருவர் கைது

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் ஒருதொகுதி வாக்காளர் அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த வாக்காளர் அட்டைகள் புதுக்குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டிலே இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடிப்படையாகக் கொண்டே கைப்பற்றப்பட்டன.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 288 வாக்குச்சீட்டுக்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் தபால் ஊழியர் இல்லாமையினால் வழக்கமாக கிராமவாசி ஒருவர் மூலமாக கடிதங்கள் வழங்கப்பட்டு வந்தது.

இதனை வழக்கமாக கொண்டிருந்த தபால் ஊழியர் குறித்த பகுதிக்கான வாக்காளர் அட்டைகளை கிராமவாசியிடம் கொடுத்து மக்களுக்கு வழங்குமாறு கூறியுள்ளார்.

குறித்த பகுதிக்கு தேர்தல் அலுவலக அதிகாரிகள் மற்றும் பொலிஸார் ஆகியோர் சென்று வாக்குச்சீட்டுக்களை மீட்டுள்ளதுடன் தபால் ஊழியரையும் கிராமவாசியையும் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts