Ad Widget

மீன் வியாபாரியிடம் கையூட்டு பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பொலிஸாருக்கு இடமாற்றம்!

பயணத்தடை காலப்பகுதியில் அனுமதிப்பதிரத்துடன் வியாபாரத்தில் ஈடுபட்ட மீன் வியாபாரியிடம் கையூட்டுப் பெற்றதாக குற்றச்சாட்டுக்கு முகம் கொடுத்துள்ள பொலிஸ் அதிகாரிக்கும், உத்தியோகஸ்தருக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது.

கொரோனா நோய்த்தொற்று பயணத்தடை காலப்பகுதியில் நடமாடும் மீன் வியாபாரிகளுக்கு நல்லூர் பிரதேச செயலாளரினால் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டது.

அதனைப் பயன்படுத்தி மீன் வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரியை அச்சுறுத்தி கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அதிகாரி ஒருவரும், உத்தியோகஸ்தர் ஒருவரும் கையூட்டுப் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பணத்தை வழங்கிய மீன் வியாபாரி தனது பகுதி கிராம அலுவலகர் ஊடாக நல்லூர் பிரதேச செயலாளரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் உயர்மட்டத்துக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக கையூட்டுப் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்களை மீன் வியாபாரி அடையாளம் காட்டியுள்ளார்.

மேற்கொண்டு விசாரணைகளை யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கண்காணிப்பில் இடம்பெற்று வருகின்றன.

இதன் ஒரு கட்டமாக விசாரணைகளுக்கு இடையூறு இன்றியும், விசாரணைகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களின் தலையீட்டை தவிர்க்கும் முகமாகவும், பொலிஸ் அதிகாரியை நெடுந்தீவுக்கும், உத்தியோகஸ்தர் காங்கேசன்துறைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை திருநெல்வேலி மற்றும் கல்வியங்காட்டு சந்தைகளை அண்மித்த வியாபரிகளிடம் கோப்பாய் பொலிஸார் கையூட்டு பெற்று வருவதாக வியாபாரிகள் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

பொலிஸாருக்கு எதிராக பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு வழங்க தமக்கு அச்சமாக உள்ளதாகவும், முறைப்பாடு வழங்கிய பின்னர் விசாரணைகள் என நேர விரயம் செய்ய தாம் விரும்பாததால் முறைப்பாடு செய்யவில்லை எனவும், மீன் வியாபாரியிடம் கையூட்டு பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் பொலிஸ் விசாரணை குழுவிற்கு இரகசிய வாக்கு மூலம் வழங்க தயார் எனவும் தெரிவித்துள்னர்.

Related Posts