Ad Widget

மீண்டும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

நாடளாவிய ரீதியில் மீண்டும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை அமுல்படுத்துமாறு சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரட்ன அறிவித்துள்ளார்.

தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவிற்கு அமைச்சர் விடுத்துள்ள பணிப்புரைக்கமைவாக இந்த திட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை மேற்கொள்ளப்படவுள்ளது.

நாட்டின் பல இடங்களில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையை கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக டெங்கு நுளம்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம். இதனால் சுற்றுச் சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறும் சுகாதார அமைச்சு மக்களை கேட்டுள்ளது.

இந்தக் காலப்பகுதியில் பாடசாலைகள், தனியார் நிறுவனங்கள், நிர்மாணப் பணிகள் இடம்பெறும் பகுதிகள் என்பன பரிசோதிக்கப்படவுள்ளன.

இதற்கமைவாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, குருநாகல், காலி, மாத்தறை, கண்டி, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

சுகாதார அதிகாரிகள், முப்படை வீரர்கள் உள்ளிட்ட இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் இந்த வேலைத்திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

Related Posts