Ad Widget

மலாலா, கைலாஷுக்கு அமைதிக்கான நோபல் பரிசு

இந்தியரான கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசப்ஸாய் ஆகியோருக்கு நடப்பாண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

mala-nopel

நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நோபல் குழுவின் தலைவர் தோர்ப் ஜோயெர்ன், இன்று அமைதிக்கான நோபல் விருதுகள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார்.

அமைதிக்கான நோபல் பரிசுக்கு மொத்தம் 278பேரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. இறுதியாக இந்தியரான கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தான் சிறுமி மலாலா ஆகியோருக்கு நடப்பாண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மலாலா யூசப்ஸாய்

பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப் புற மாகாணத்தில் 1997ஆம் ஆண்டு பிறந்தவர் சிறுமி மலாலா யூசப்ஸாய். அப்பகுதியில் பெண்கள் கல்வி கற்க தலிபான் தீவிரவாதிகள் தடை விதித்திருந்தனர்.

இந்நிலையில், தலிபான்களின் ஒடுக்குமுறை குறித்து பீ.பீ.சி.யின் உருது மொழி இணையதளம் ஊடாக பரப்புரை மேற்கொண்டு வந்தார் மலாலா. பின்னர் வெளிப்படையாக தொலைக்காட்சியில் பேட்டியளித்தார்.

இதனால், 2012ஆம் ஆண்டு மலாலாவை கொல்ல தலிபான் தீவிரவாதிகள் முயன்றனர். தலிபான்களில் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நிலையில் இங்கிலாந்தில் அடைக்கலம் புகுந்தார் மலாலா.

அதன் பின்னர் தொடர்ந்தும் பெண்களின் கல்வி முன்னேற்றம் பற்றிய பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். மலாலாவின் பிறந்த நாளை, ‘மலாலா தினம்’ என்று ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்தியது.

பாகிஸ்தான் நாட்டின் முதலாவது அமைதி, உலக அமைதி அறக்கட்டளையின் தைரியத்துக்கான விருது ஆகியவற்றை பெற்ற மலாலாவுக்கு நடப்பாண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிகச் சிறிய வயதில் நோபல் பரிசு பெற்றவர் என்ற பெருமை மலாலாவுக்கு கிடைத்துள்ளது.

கைலாஷ் சத்யார்த்தி

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் பிறந்த கைலாஷ் சத்யார்த்தி. டெல்லியில் வசித்து வருகிறார். இவர் தனது ‘பச்பான் பச்சோ அந்தோலன்’ என்ற அமைப்பின் மூலம் சுமார் 80 ஆயிரம் குழந்தை தொழிலாளர்களை மீட்டு அவர்களது வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்துள்ளார்.

இவர், 1984ஆம் ஆண்டு முதல் பல்வேறு மனித உரிமை விருதுகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts