பிரித்தானியாவின் புதிய பிரதமரானார் அண்டி பர்ன்ஹாம்!!

பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னர் மூன்றாம் சார்ள்ஸைச் சந்தித்ததைத் தொடர்ந்து, அண்டி பர்ன்ஹாம் உத்தியோகபூர்வமாக பிரித்தானியாவின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார்.

கடந்த நான்கு ஆண்டுகளில் பிரித்தானியாவின் நான்காவது பிரதமராகவும், கடந்த பத்து ஆண்டுகளில் ஆறாவது பிரதமராகவும் அவர் பதவியேற்றுள்ளார்.

தொடர்ச்சியான அரசியல் பின்னடைவுகள் மற்றும் கட்சிக்குள் எழுந்த அதிருப்தி காரணமாக, தொழிற்கட்சித் தலைவர் மற்றும் பிரதமர் பதவிகளில் இருந்து கியர் ஸ்டார்மர் கடந்த வெள்ளிக்கிழமை விலகியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, நேற்று (20) திங்கட்கிழமை மன்னர் மூன்றாம் சார்ள்ஸைச் சந்தித்து தனது பிரதமர் பதவியிலிருந்து உத்தியோகபூர்வமாக இராஜினாமா செய்தார்.

தொழிற்கட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட வேறு வேட்பாளர்கள் எவரும் முன்வராததால், அண்டி பர்ன்ஹாம் போட்டியின்றி தொழிற்கட்சியின் தலைவராகவும், அதன் மூலம் நாட்டின் பிரதமராகவும் ஒருமனதாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

மன்னரின் அழைப்பை ஏற்று அரசாங்கத்தை அமைக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பர்ன்ஹாம், பிரதமர் இல்லமான 10 டவுனிங் ஸ்ட்ரீட்டில் உரையாற்றிய பின்னர் தனது புதிய அமைச்சரவையை அறிவிக்கவுள்ளார்.

முன்னாள் அமைச்சரும் நீண்டகால பாராளுமன்ற உறுப்பினருமான பர்ன்ஹாம், 2017 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தை விட்டு விலகி கிரேட்டர் மான்செஸ்டரின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வந்தார்

அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தல் மூலம் அவர் மீண்டும் பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். மேயர் பதவியிலிருந்து நேரடியாக பிரித்தானியாவின் பிரதமராக பதவியேற்றிருப்பது அந்நாட்டு அரசியல் வரலாற்றில் அரிதான நிகழ்வாகக் கருதப்படுகிறது.

Related Posts