Ad Widget

மதுபோதையில் சிக்கிய சாரதிக்கு 77,500 ரூபா தண்டம்!!

உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனம் செலுத்தியமை மற்றும் மதுபோதையில் சாரத்தியம் செய்தமை உள்ளிட்ட குற்றங்களை புரிந்த ஒருவருக்கு 77 ஆயிரத்து 500 ரூபா தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மதுபோதையில் சாரத்தியம் செய்த குற்றச்சாட்டில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்தனர்.

மதுபோதையில் சாரத்தியம் செய்தமை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம், காப்புறுதிப் பத்திரம், வாகன வரி அனுமதிப்பத்திரம் ஆகியவையின்றி வாகனம் செலுத்தியமை ஆகிய நான்கு குற்றச்சாட்டுக்களை சாரதிக்கு எதிராக பொலிஸார் முன்வைத்தனர்.

வழக்கு இன்று யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. சாரதி குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டார்.

“மதுபோதையில் சாரத்தியம் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம், காப்புறுதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்தியமை ஆகிய 3 குற்றங்களுக்கும் தலா 25 ஆயிரம் ரூபா வீதம் 75 ஆயிரம் ரூபா தண்டமாகவும் வாகன வரி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்தியமைக்கு 2 ஆயிரத்து 500 ரூபாவுமாக மொத்தம் 77 ஆயிரத்து 500 ரூபாவை குற்றவாளி தண்டமாகச் செலுத்தவேண்டும். தண்டப்பணத்தில் ஒரு பகுதியான 38 ஆயிரத்து 750 ரூபாவை இன்றைய தினமும் மற்றைய பகுதியான 38 ஆயிரத்து 750 ரூபாவை வரும் 23ஆம் திகதியும் செலுத்தி முடிக்கவேண்டும்” என்று நீதிவான் உத்தரவிட்டார்.

Related Posts