கிளிநொச்சியில் தாயையும் மகனையும் வெட்டிக் கொலை செய்த குற்றச்சாட்டில் அயல் வீட்டில் வசிக்கும் குடும்பத்தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தாயையும் அவரது மகனையும் சந்தேகநபர் வெட்டிக் கொலை செய்தார் என்று ஆரம்ப விசாரணைகளில் தெரியவருவதாவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
கிளிநொச்சி ஜெயந்தி நகரில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை தாயும் மகனும் வெட்டுக்காயங்களுடன் வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டனர்.
ஜெயந்தி நகரைச் சேர்ந்த விஷ்ணுகாந்தி வள்ளியம்மை (வயது-–70), அவரது மகனான விஷ்ணுகாந்தி லிங்கேஸ்வரன் (வயது-34) ஆகியோரே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
“கொல்லப்பட்டவரும் நானும் சேர்ந்து சம்பவ தினத்தன்று (திங்கட்கிழமை இரவு) மது அருந்தினோம். அப்போது எங்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனால் இரும்புக் கம்பியால் அவரைத் தாக்கினேன். அவர் மயங்கிச் சரிந்தார்.
அவரைத் தாக்கியதை அவரது தாயார் கண்டுவிட்டார். அதனால் தாயாரையும் தாக்கி கத்தியால் வெட்டிக் கொன்றேன். மகன் தப்பிவிடுவார் என்று அவரையும் கத்தியால் வெட்டிக் கொலை செய்தேன்” என்று சந்தேகநபரான உதயன் பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கினார்.
“சந்தேகநபர் கொலைக்குப் பயன்படுத்திய கத்தி மற்றும் கம்பி என்பன அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் கிணற்றுக்குள்ளிலிருந்து மீட்கப்பட்டன.
சந்தேகநபர் விசாரணைகளின் பின்னர் இன்று வியாழக்கிழமை கிளிநொச்சி நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படுவார்” என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.