Ad Widget

போதைப்பொருள்களைப் பிடிக்கச் சென்ற சுகாதாரத் துறையினருக்கு உயிர் அச்சுறுத்தல்!!

யாழ்ப்பாணம், நாவந்துறைப் பகுதியில் உள்ள வீடொன்றில் மாவா உள்ளிட்ட போதைப்பொருள்கள் விற்பனைக்கு வைத்திருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற யாழ்ப்பாணம் மாநகர பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அந்த வீட்டை சோதனையிட்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சுமார் 3 லட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருள் பாக்குப் பொதிகளை மீட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்கையில்….

“நாவந்துறைப் பகுதியில் உள்ள முஸ்லிம் குடும்பம் வசிக்கும் வீடொன்றில் மாவா உள்ளிட்ட போதைப்பொருள் பாக்கு பாடசாலை மாணவர்களுக்கு விற்கும் நோக்குடன் பொதியிடப்பட்டதாகத் தகவல் கிடைத்தது.

அந்த வீட்டில் வசிப்பவருக்கு எதிராக ஏற்கனவே நீதிமன்றில் இதே குற்றச்சாட்டுடன் வழக்கும் உள்ளது. யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள முன்னணி பாடசாலை மாணவர்களுக்கு போதை கலந்த பாக்கு விற்பனை செய்யப்படுவதும் அறியக் கிடைத்தது.

அதனால் யாழ்ப்பாணம் மாநகர சபை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கு தகவல் வழங்கி அவர்கள் ஊடாக போதை கலந்த பாக்கு சரைகளை மீட்க நடவடிக்கை எடுத்தோம். அந்த வீட்டை இன்று பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சோதனைக்குட்படுத்தினர்.

வீட்டில் இருந்த மூவர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களை பணி செய்ய விடாமல் தடுத்தனர். ஒரு கட்டத்தில் அவர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களைக் “கொலை செய்வோம்” என்று உயிர் அச்சுறுத்தல் விடுத்தனர்.

எனினும் அந்த வீட்டிலிருந்து சுமார் 3 லட்சம் ரூபா பெருமதியான போதை பாக்கு கைப்பற்றப்பட்டன. அவை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் நாளை வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு சான்றுப்பொருள் நீதிமன்றில் ஒப்படைக்கப்படும்” என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

Related Posts