Ad Widget

பொலிஸாரின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் யாழ். பல்கலைக்கழக பண்பாட்டு வாயிலில் தீபங்கள் ஏற்றி நினைவேந்தல்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பண்பாட்டு நுழைவாயிலில் நினைவேந்தல் தீபங்கள் ஏற்றப்பட்டன.இந்த நினைவேந்தல் நிகழ்வு நேற்று மாலை 7 மணியளவில் இடம்பெற்றது.

அதனை அறிந்த யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெனாண்டோ, கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பி.வீரசிங்க ஆகியோர் தலைமையிலான பொலிஸ் பிரிவினர் சம்பவ இடத்துக்கு வருகை தந்தனர்.

அங்கு தீபங்கள் ஏற்றிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் விவரங்களைச் சேகரித்த பொலிஸார், நினைவேந்தலை நடத்தியோரை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டனர்.

தமிழினப் படுகொலையை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு இந்த நினைவேந்தல் நிகழ்வு ஒழுங்கமைப்பட்டது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு , பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக பண்பாட்டு வாயிலில் நேற்று வியாழக்கிழமை இரவு 7மணிக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்த ஏற்பாடு செயப்பட்டிருந்தது.

இந்நிலையில் மாலை 6 மணிமுதல் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் உட்செல்லும் வாயில் முன்பாக கோப்பாய் மற்றும் யாழ்ப்பாண பொலிஸார் காத்திருந்தனர்.

பொலிஸார் அங்கு காத்திருக்க மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் திட்டமிட்டபடி இரவு 7 மணிக்கு பண்பாட்டு வாயில் முன்பாக சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

மாணவர்கள் அஞ்சலி செலுத்தி முடியும் தருவாயில் , பிரதான வாயிலில் நிகழ்வுகள் நடைபெறுவதனை அறிந்து கொண்ட பொலிஸார் அவ்விடத்திற்கு விரைந்து நிகழ்வினை தடுக்க முயன்றனர்.

அப்போது மாணவ ஒன்றிய பிரதிநிதிகள் மூவர் தாம் நிகழ்வு முடிந்து திரும்புகிறோம் என கூறி செல்ல முற்பட்ட வேளை அவர்களை புகைப்படம் எடுத்த பொலிஸார் அவர்களின் அடையாள அட்டைகளை வாங்கி விவரங்களை குறிப்பெடுத்து கொண்டனர்.

அத்துடன் ” இவ்வாறான நினைவஞ்சலி நிகழ்வுகளை நடாத்துவது சட்டவிரோதமானது , மாணவர்களாக இருப்பதனால் உங்களை கைது செய்யவில்லை. இல்லை எனில் உங்களை கைது செய்து மூன்று மாத காலம் வரையில் தடுத்து வைக்க கூடிய அதிகாரம் எமக்குண்டு ” என கடுமையாக மாணவர்களை பொலிஸார் மிரட்டி அனுப்பினர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெறும் இடங்களுக்கு செல்லும்ம் பொலிஸார் சுகாதார அறிவுறுத்தல்கள் காரணம் காட்டி நிகழ்வுகளை குழப்பவுதற்கு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நேற்றுமுன்தினம் செம்மணியில் நடைபெற்ற நிகழ்வு மற்றும்நேற்றைய தினம் நவாலி , பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை பொலிஸார் குழப்ப முற்பட்ட போதிலும், நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தாம் சுகாதார அறிவுறுத்தல்களின் அடிப்படையிலையே நிகழ்வுகளை முன்னெடுக்கிறோம் என நிகழ்வுகளை முன்னெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts