தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை; மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2026-ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இலக்காகக் கொண்ட மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவது இன்று (05) நள்ளிரவு முதல் தடை செய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சை நிறைவடையும் வரை இந்தத் தடை உத்தரவு அமுலில் இருக்கும்.

மேலும், இக்காலப்பகுதியில் பரீட்சையில் எதிர்பார்க்கப்படும் வினாக்களைக் கொண்ட வினாத்தாள்களை அச்சிடுதல், விநியோகித்தல் மற்றும் பரப்புதல் ஆகியவையும் தடை செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், பரீட்சை வினாக்கள் அல்லது அது போன்ற வினாக்களை வழங்குவதாகக் கூறி சுவரொட்டிகள், பதாகைகள் மற்றும் துண்டுப்பிரசுரங்களை காட்சிப்படுத்துதல் அல்லது விநியோகித்தல் மற்றும் மின்னணு மற்றும் அச்சு ஊடகங்களில் விளம்பரம் செய்தல் ஆகியவையும் தடை செய்யப்பட்டுள்ளன.

இத்தகைய விளம்பரப் பொருட்களை வைத்திருப்பதும் கண்டிப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையானது, நாடு முழுவதும் உள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் ஆகஸ்ட் 9-ஆம் திகதி நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts