Ad Widget

புதிய அரசியல் யாப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை, தமிழ் கூட்டமைப்பும் இணக்கம்

அரசியல் யாப்பில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமை தொடர்ந்தும் அவ்வாறே பேணப்படும் என ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் உறுதியளித்துள்ளார்.

புதிய அரசியல் யாப்பிலும் பௌத்த மதத்திற்கு தற்போதைய அரசியல் யாப்பில் வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையை அவ்வாறே பேணுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்துக் கட்சிகளும் முழுமையான இணக்கத்தை தெரிவித்துள்ளதாகவும் ஸ்ரீலங்கா பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு கொலன்னாவ பகுதியிலுள்ள விகாரையில் நேற்றிரவு நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்வில் கலந்துகொண்டு அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே ஸ்ரீலங்கா பிரதமர் இந்தத் தகவல்களைத் தெரிவித்திருக்கின்றார்.

புதிய அரசியல் யாப்பில் பௌத்த மதத்தை பாதுகாப்பதற்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பில் எந்த சிக்கலும் இல்லை எனவும் நாடாளுமன்றத்தில் வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்துக் கட்சிகளும் பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்கும் முன்னுரிமை கொடுப்பதற்குமான விதந்துரைகளை தொடர்ந்தும் அப்படியே வைத்திருக்க முழுமையான இணக்கத்தைத் தெரிவித்திருக்கின்றன.

அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மாத்திரமன்றி கத்தோலிக்கத் திருச்சபையின் அதி மேற்றுராணியாரான கர்தினாலும் இதனை அங்கீகரித்துள்ளார்.

அதேபோல் இந்து, இஸ்லாம் மதங்களின் தலைவர்களும் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கி அதனைப் பாதுகாக்க வேண்டும் என்பதை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர்.

அதனால் அரசியல் யாப்பிலுள்ள பௌத்த மதம் தொடர்பான சரத்து தொடர்பில் பிரச்சனையாக்கிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அரசு என்ற ரீதியில் ஜனாதிபதியும், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் நாங்களும் இவற்றை பிரசாரப்படுத்துவதில்லை.

பௌத்த மதத்தையும், சாசனத்தையும் பாதுகாக்க நாம் செயல் ரீதியாக நடவடிக்கை எடுத்துள்ளோம். வார்த்தைகளால் அல்ல. சிலர் வார்த்தை ஞாலங்களால் பாதுகாப்பதாக பிரசாரம் செய்யத் திறமையானவர்கள். ஆனால் அவர்கள் செயல் ரீதியாக இருப்பதையும் அழித்து விடுகின்றனர்.

ஆனால் நாம் செயல் ரீதியாக பௌத்த மதத்தை பாதுகாத்து அதனை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என்று ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts