இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக ரயில் செயற்பாட்டு கண்காணிப்பு அதிகாரிகளின் தொழிற்சங்க சம்மேளனம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, இன்று (புதன்கிழமை) நள்ளிரவு முதல் 48 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அந்த சம்மேளனம் அறிவித்துள்ளது.
சம்பள பிரச்சினை உள்ளிட்ட சில கோரிக்கையை முன்வைத்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடபோவதாக அந்த சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் லால் ஆரியரத்ன தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்துள்ள நிலையில், இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் மிகப் பிரதான பொதுப் போக்குவரத்தாக ரயில் சேவையே காணப்படுகின்றது. இதில் அன்றாடம் பல்லாயிரக்கணக்கான மக்கள் வடக்கிலிருந்து தெற்கு வரை பயணிக்கின்றனர்.
வீதிகளில் நிலவும் வாகன நெரிசல்கள் மற்றும் பேருந்துகளின் கால தாமதம் என்பவற்றை கருத்திற்கொண்டு பொதுமக்கள் ரயில்களையே நாடுகின்றனர்.
அதேவேளை, ரயில்வே திணைக்களத்தின் பணியாளர்கள். செலுத்துனர்களுக்கு மிக உயர்வான சம்பளமே வழங்கப்பட்டு வருகின்றது.
இருந்தபோதும் அந்த திணைக்களத்தில் உள்ள வேறு பல துறையினரும் தமது கோரிக்கைகளை முன்வைத்து அவ்வப்போது, தொழிற்சங்க போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.