நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ காலத்தில் ஆலயச் சூழலில் 600 இற்கும் மேற்பட்ட பொலிஸார் கடமையில் ஈடுபடவுள்ளதாக வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்தார்.
நல்லூர் கந்தசுவாமி கோவிலின் மஹோற்சவம் நாளை வெள்ளிக்கிழமை (01) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இந்த நிலையில், இன்று வியாழக்கிழமை (31) நள்ளிரவுடன் ஆலயத்தைச் சூழவுள்ள பிரதான வீதிகள் அனைத்தும் மூடப்பட்டு 24 மணிநேரமும் பொலிஸாரின் பாதுகாப்பு பணிகள் முன்னெடுக்கப்படும்.
அத்துடன், ஆலயத் திருவிழாக் காலத்தில் மாநகரசபையின் சுகாதார பணிமனை அமைந்துள்ள இடத்தில் தற்காலிக பொலிஸ் நிலையம் ஒன்றை அமைக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
நல்லூர் உற்சவ காலக் கடமைக்காக யாழ்ப்பாணத்திலுள்ள 17 பொலிஸ் நிலையங்களின் பொலிஸாரும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மாங்குளம் பொலிஸ் பிரிவுகளின் பொலிஸாரும் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.