Ad Widget

நலன்புரி முகாம்களில் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி கல்வி கற்கும் 1150 சிறுவர்கள்

யாழ்.மாவட்டத்தில் உள்ள நலன்புரி முகாம்களில் ஆயிரத்து 150 சிறுவர்கள் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி இன்றுவரை தமது கல்வியை தொடர்ந்து வருவதாக வலி.வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வு சங்கத் தலைவர் அ.குணபாலசிங்கம் தெரிவித்துள்ளார்.

education-child-akthi-mukam-mallakam

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

வலி.வடக்கிலிருந்து இடம் பெயர்ந்து 26 வருடங்களாக நலன்புரி முகாம்களில் அடிப்படை வசதிகள் ஏதுவும் இன்றி தமிழ்க் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இங்கு வாழ்பவர்கள் அதிகமாக கூலித் தொழில் செய்தே தமது வாழ் வாதாரத்தை கொண்டு செல்கின்றார்கள்.

அவர்களுடைய ஊதியம் அன்றாட உணவு தேவைக்கே போதுமானதாக இருக்கின்ற தனால் தமது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளில் கூடிய கவனம் செலுத்த முடிவதில்லை. இதனால் நலன்புரி முகாம்களில் உள்ள மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானதாகவே இருக்கிறது.

தற்போது யாழ்.மாவட்டத்தில் உள்ள 26 நலன்புரி முகாம்களில் ஆயிரத்து 26 மாணவர்கள் கல்வி கற்றுவருகின்றனர். அவர்களில் 507 ஆண்களும் 519 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

இவர்களை தவிர நலன்புரி முகாம்களை விட்டு வெளியே 124 மாணவர்கள் கல்வி கற்றுவருகின்றார்கள்.
அந்தவகையில் மல்லாகம் கோணப்புலம் நலன்புரி முகாமில் 62 ஆண்களும் 66 பெண்களும் ஊறணி நலன் புரிநிலையத்தில் 13 ஆண்களும் 14 பெண்களும் மல்லாகம் நீதவான் முகாமில் 25 ஆண்களும் 33 பெண்களும் மல்லாகம் தும்பு தொழிற்சாலை முகாமில் 9 ஆண்களும் 11 பெண்களும் தெல்லிப்பழை குட்டியபுலம் நலன்புரி முகாமில் 23 ஆண்களும் 23 பெண்களும் தெல்லிப்பழை நீதவான் வெளிமுகாமில் 6 ஆண்களும் 2 பெண்களும் உரும்பிராய் கிருஷ்ணன் கோவில் முகாமில் 41 ஆண்களும் 31 பெண்களும் உரும்பிராய் இலுப்பையடி முகாமில் 15 ஆண்களும் 21 பெண்களும் உரும்பிராய் சிவபுரம் முகாமில் 11 ஆண்களும் 17 பெண்களும் உரும்பிராய் யோகபுரம் நலன்புரி முகாமில் 34 ஆண்களும் 38 பெண்களும் உரும்பிராய் இந்துக்கல்லூரி சங்க முகாமில் 12 ஆண்களும் 12 பெண்களும் சுன்னாகம் பிள்ளையார் முகாமில் 19 ஆண்களும் 18 பெண்களும் உடுவில் நீதவான் முகாமில் 6 ஆண்களும் 7 பெண் களும் அளவெட்டி இலந்தையடி முகாமில் 18 ஆண்களும் 10 பெண்களும் சங்குவேலி இந்து நலன்புரி முகாமில் 6 ஆண்களும் 2 பெண்களும் சுன்னாகம் கண்ணகி நலன்புரி முகாமில் 77 ஆண்களும் 63 பெண்களும் உடுப்பிட்டி தெற்கு நலன்புரி முகாமில் 5 ஆண்களும் 5 பெண்களும் இணுவில் காரைக்கால் நலன்புரி முகாமில் 4 ஆண்களும் 4 பெண்ளும் காரைக்கால் நலன்புரி முகாம் வெளிமுகாமில் 4ஆண்களும் 5 பெண்களும் பொலிகண்டி நிலவன் குடியிருப்பு முகாமில் 22 ஆண்களும் 16 பெண்களும் பொலிகண்டி சின்னாவளை குடியிருப்பில் 26 ஆண்களும்ம் 24 பெண்களும் பொலிகண்டி பாலாவி முகாமில் 26 ஆண்களும் 41 பெண்களும் மயிலணி இந்து வித்தியாலயத்தில் 12 ஆண்களும் 13 பெண்களும் பருத்தித்துறை தெளியம்மன் முகாமில் 16 ஆண்களும் 17 பெண்களும் பருத்தித்துறை தெளியம்மன் முகாம் வெளியில் 12 ஆண்களும் 20 பெண்களும் காங்கே சன்துறை நலன்புரி முகாமில் 3 ஆண்களும் 6 பெண்களும் கல்விகற்று வருகின்றார்கள்.

எமது நீண்ட கால கோரிக்கைகளின் அடிப்படையில் சில சில உதவித்திட்டங்கள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் மாணவர்களின் கல்வி செயற்பாட்டிற்கு எந்தவிதமான முன்னேற்றமான உதவித்திட்டங்களும் போதிய அளவில் கிடைக்கவில்லை.

எமது பிள்ளைகளின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு மாணவச் செல்வங்களை சரியான பாதையில் நடத்த வேண்டியது எமது ஒவ்வொருவரது கடமையாகும்.

அடிப்படை வசதிகள் சிறிதும் இன்றி கல்வி நடவடிக்கையை தொடரும் மாணவர்களுக்கு அனைத்து தரப்பினரும் உதவி செய்து அவர்கள் எதிர்காலத்தை வளப்படுத்த வேண்டியது அவசியம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts