சாவகச்சேரி நகர சபை உப தவிசாளரின் பதவி பறிக்கப்பட்டு, உறுப்பினர் பதவியும் வறிதாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து சாவகச்சேரி வர்த்தகர்கள் இன்று (26) வெள்ளிக்கிழமை கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்றறிக்கையை சபையில் விமர்சித்து, அதனை தூக்கி வீசிய குற்றத்தில் , நகர சபை உப தவிசாளர் ஞா.கிசோரை வடமாகாண ஆளுநர், உப தவிசாளரின் பதவியை நீக்கியும், நகர சபை உறுப்புரிமையை வறிதாக்கியும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தை கண்டித்தும் நீதி கோரியும், சாவகச்சேரி வர்த்தகர்கள் இன்றைய தினம் முழு கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
சாவகச்சேரி சந்தை, வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. அதேநேரம் பாடசாலைகள், வங்கிகள், அரச நிறுவனங்கள், போக்குவரத்து சேவைகள் என்பன வழமை போன்று இயங்கி வருகின்றன.
அதேவேளை, கொடிகாமம் பகுதிகளிலும் பல வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.