சமரச தேசிய அரசாங்கமாக புதிய பாராளுமன்றில் ஒன்றிணைந்து செயற்படவென ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற பின்னர் , அதே நிகழ்வில் ஐதேக பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம் மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.
பிரதமர் பதவியேற்பு மற்றும் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளவருமான மஹிந்த ராஜபக்ஷவும் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும்.
ரணிலின் சூளுரை
இலங்கைக்குள் வேறு தேசத்தை உருவாக்குவதற்கோ அல்லது அதற்காக முயற்சிக்கும் எந்தவொரு சக்திக்கும் இடமளிக்கப்போவதில்லை என சற்றுமுன்னர் பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். சத்தியப்பிரமாண கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் வாசிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு உறுதியளித்தார்.