Ad Widget

தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தாவிட்டால் ஆதரவை விலக்குவோம் – த.தே.கூட்டமைப்பு எச்சரிக்கை

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை உடனடியாக தரமுயர்த்தாது விட்டால் அரசாங்கத்திற்கு வழங்கும் தமது ஆதரவை விலக்குவோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற இலங்கை காணி மீட்டல் மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபன திருத்த சட்ட மூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தவிடக்கூடா என்பதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் அதன் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹரிஷும் மிகத் தீவிரமாகவுள்ளனர்.

இவர்களுக்காக எமது நியாயமான கோரிக்கையை அரசு உதாசீனம் செய்கின்றது. இந்த அரசையும் ஜனாதிபதியையும் பிரதமரையும் கொண்டு வந்தவர்கள் நாங்கள். அந்த நன்றிக்கடன் உங்களுக்கு இருக்கின்றதா எனக்கேட்க விரும்புகின்றோம்.

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை உடனடியாக அரசு தரமுயர்த்தாதுவிட்டால் அரசுக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை விலக்குவோம். இப்போது கூட தமிழ் மக்களின் விருப்பத்துக்கு மாறாகவே நாம் ஆதரவளித்து வருகின்றோம். இனியும் எமது மக்களை நாம் சமாதானப்படுத்த முடியாது. எனவேதான் அரசுக்கான ஆதரவை மீளப்பெறவேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலைமை ஏற்படக்கூடாதெனில் அங்கு தற்போது நடந்து வரும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை உடனடியாக தரமுயர்த்துவதாக பிரதமர் அறிவிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

Related Posts