Ad Widget

ஜனாதிபதி வட மாகாணத்திற்கு விஜயம்!!

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அடுத்த மாதம் வட மாகாணத்திற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் கைதடியில் உள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

நாட்டுக்காக ஒன்றிணைவோம் வேலைத்திட்டத்தின்கீழ், அடுத்த மாதம் 3ஆம் திகதி முதல் 8 ஆம் திகதிவரை முல்லைத்தீவில் சில வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

காணி வழங்கல், வீட்டுத் திட்டம் உள்ளிட்ட வேலைத்திட்டங்கள் அவற்றில் உள்ளடங்குகின்றன.

இந்த நிலையில், குறித்த வேலைத்திட்டங்களின் நிமித்தம், அடுத்த மாதம் 8ஆம் திகதி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முல்லைத்தீவுக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார் என வட மாகாண ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு நிரந்தரமான உபவேந்தர் விரைவில் நியமிக்கப்படுவார் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் இரண்டு பேரின் பெயர்களை, தான் பரிந்துரை செய்துள்ளதாகவும் வடக்கு ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழத்தின் உபவேந்தராக பதவி வகித்த விக்னேஸ்வரன் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரியாக பேராசிரியர் கதிர்காமநாதன் கந்தசாமி நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts