Ad Widget

ஜனாதிபதியின் சிரேஷ்ட தலைமைத்துவ பண்புகளுக்கு இந்திய அரசு பாராட்டு!

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காட்டும் சிரேஷ்ட தலைமைப் பண்புகளை எடுத்துக்காட்டும் மனப்பாங்கு தொடர்பாக இலங்கை மாத்திரமன்றி இந்திய அரசும் இந்திய மக்களும் தெளிவாக புரிந்து கொண்டுள்ளதாக இந்திய வெளியுறவுச் செயலாளர் எஸ்.ஜயசங்கர் குறிப்பிட்டார்.

indaia-srilanka-

இலங்கைக்கு வருகை தந்த இந்திய வெளியுறவுச் செயலாளர் நேற்று (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த போதே இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி, அண்மையில் பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையின் போது பல்வேறு சவால்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக காட்டிய சாதகமான மனப்பாங்கு இந்திய அரசாங்கத்தின் விசேட அவதானத்தைப் பெற்றுள்ளதாகவும் இந்திய வெளியுறவுச் செயலாளர் குறிப்பிட்டார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால வரலாறு மற்றும் நட்புறவு பற்றி இங்கு வலியுறுத்திய ஜனாதிபதி, தனது இந்திய விஜயம், இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் ஆகியவற்றினூடாக இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவு மாத்திரமன்றி அதற்கு அப்பாற்பட்ட நட்புறவு கட்டியெழுப்பப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்குமிடையே இருதரப்பு கலந்துரையாடல்கள் மிகவும் பயனுள்ளதாக அமைந்ததெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, எதிர்வரும் மாதத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா சுவராஜ், இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதுடன், அதன் போது இருநாடுகளுக்குமிடையே இருதரப்பு கலந்துரையாடல்களை மேலும் முன்கொண்டு செல்ல எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக இந்திய அரசு வழங்கும் ஒத்துழைப்பு பற்றி நன்றிகளைத் தெரிவித்த ஜனாதிபதி, புனர்வாழ்வு மற்றும் மீளக்குடியமர்த்தல் நடவடிக்கைகளிலும் மின்சாரம், புகையிரதப் பாதை ஆகிய உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதிலும் விசேடமாக பலாலி விமான நிலையம் மற்றும், காங்கேசன்துறை துறைமுகத்தை நவீனமயப்படுத்துவதற்காக இந்திய அரசு வழங்கும் உதவிகள் தொடர்பாகவும் தனது நன்றியைத் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்குமிடையே எதிர்காலத்தில் உருவாகவுள்ள கலந்துரையாடல்கள் மூலம் இருதரப்பு உறவுகள் வலுவடைதல் மாத்திரமன்றி, சிலபோது ஒரு சில ஊடகங்களில் வெளியாகும் உண்மைக்குப் புறம்பான பரப்புரைகளை சீர்செய்வதற்கும் பயனுள்ளதாக அமையுமென ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Related Posts