Ad Widget

சுன்னாகம் சித்திரைவதை விவகாரம் – 5 பொலிஸாருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் சந்தேகநபரைத் தடுப்புகாவலில் வைத்து சித்திரைவதை செய்தபின் கொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டில் முன்னாள் பொறுப்பதிகாரி சின்தக பண்டார உள்ளிட்ட 5 பொலிஸாருக்கு எதிரான வழக்கு ஜூன் 14ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் நேற்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு வந்தது.

இதன்போது எதிரிகள் ஐந்து பேரையும் அநுராதபுரம் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மன்றில் முற்படுத்தினர். அவர்கள் சார்பில் சட்டத்தரணிகள் முன்னிலையாகினர். வழக்குத் தொடுனர் சார்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் முன்னிலையானார்.

இதன்போது இருதரப்பு சமர்பணங்களையும் ஆராய்ந்த யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி வழக்கை வரும் ஜூன் 14ஆம் திகதிவரை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

திசாநாயக்க முதியன்சேலாகே சின்தக நிஷான்த பிரியபண்டார, ராஜபக்ஷ முதியன்சேலாகே சங்ஜீவ ராஜபக்ஷ , கோன்கலகே ஜயன்த, ஞானலிங்கம் மயூரன் மற்றும் வீரசிங்க தொரயலாகே ஹேமசந்திர வீரசிங்க ஆகிய ஐந்து முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்களும் மனித குலத்துக்கு எதிரான சித்திரவதைக் குற்றத்துக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அநுராதபுரம் சிறைச்சாலையில் அனுபவித்து வருகின்றனர்.

அவர்கள் ஐவருக்கும் எதிராக சிறிஸ்கந்தராஜா சுமணனை ராமநாதபுரம் என்னுமிடத்தில் வைத்து தண்டனைச் சட்டக்கோவை 140 ஆம் பிரிவின் கீழ் தண்டிக்கூடிய காயம் விளைவித்த குற்றச்சாட்டும் மற்றும் அதே இடத்தில் வைத்து அவரைக் கொலை செய்தமைக்காக 296ஆம் பிரிவின் கீழ் தண்டிக்கப்படக் கூடிய கொலைக் குற்றச்சாட்டும் என 3 குற்றச்சாட்டுக்களின் கீழ் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிகையில் 10 சிவில் சாட்சிகள், 2 இராணுவ அதிகாரிகள் மற்றும் சட்ட மருத்து அதிகாரி உள்பட மொத்தம் 40 சாட்சிகள் இணைக்கப்பட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தைச் சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் நிசாந்த டி சில்வாவும் சாட்சிப் பட்டியலில் உள்ளடங்குகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts