எதிர்வரும் நான்காம் திகதி இலங்கையின் சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது.அந்த நாளை கரி நாளாக அனுஷ்டிக்குமாறு அனைத்து தமிழ் பேசுகின்ற மக்களையும் அழைத்து நிற்பதாக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் அ.அபிஷேக் இந்த அழைப்பினை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கமும் இணைந்து இந்த கறுப்பு நாள் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளோம்.
அந்தவகையில் 04ஆம் திகதி வடக்கில் கிளிநொச்சியிலும், கிழக்கில் மட்டக்களப்பிலும் காலை 10.00 மணியளவில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
எமது உரிமைகளை பெற்றுக் கொள்ளக்கூடிய ஒரே வழி கல்வியாகதான் காணப்படுகிறது.
எங்களது மக்களின் நலனுக்காகவே நாங்கள் பல்கலைக்கழகம் சென்றோம். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் நாங்கள் என்ன காரணத்திற்காக பல்கலைக்கழகம் சென்றோமோ அந்த காரணம் தற்போது பின்னோக்கி செல்லப்படுகிறது.
ஒரு காலகட்டத்தில் தமக்கான நிலம் வேண்டும் என்று போராடியவர்கள் தான் தமிழ் மக்கள்.
இன்றைய அரசாங்கம் வடக்கு – கிழக்கு மக்களை இணைத்து ஒன்றாக பயணிப்போம் என்று கூறினாலும் தமிழர் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை செய்து கொண்டே இருக்கின்றனர்.
உங்களது ஆக்கிரமிப்புகளை எந்த அளவிற்கு விரைவாக நிறுத்துகின்றீர்களோ அந்த அளவிற்கு தான் இந்த நாட்டினை ஒன்றாக மாற்ற முடியும்.
அரசாங்கம் சொல்வது ஒன்று செய்வதொன்று. இவ்வாறான சூழ்நிலையில் மீண்டும் இளைஞர்கள் அரசாங்கத்திற்கு எதிரான நிலையில் செல்லலாம். எனவே அரசாங்கம் அனைத்து மக்களையும் சம கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும் என்றார்.