Ad Widget

சீன நிறுவனத்தின் கடலட்டை வளர்ப்பு நிலையத்தினை பார்வையிட்டார் கஜேந்திரன்!

கிளிநொச்சி பூநகரியில் அமைந்துள்ள சீன நிறுவனத்தின் கடலட்டை வளர்ப்பு இடம்பெறும் பகுதியை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் உள்ளிட்ட குழுவினர் நேற்று(செவ்வாய்கிழமை) பார்வையிட்டிருந்தனர்.

இதன்போது குறித்த கடலட்டை பண்ணையில் சீனர்கள் எவரும் இருந்திருக்கவில்லை.

ஆனாலும் அங்கு அவர்கள் தங்கியிருந்தமைக்கான ஆதாரங்கள் தொடர்ந்தும் காணப்படுவதுடன், குறித்த நிறுவனத்தில் பணி புரியும் தமிழ் பேசும் நபர்கள் அங்கு தங்கி இருந்தமையை அவதானிக்க முடிந்தது.

அத்துடன், அங்கு சீன மொழியில் எழுதப்பட்டிருந்த உணவு பொதிகளையும் அவதானிக்க முடிந்ததுடன், மின்சார கட்டமைப்பு உள்ளிடட சகல வசதிகளுடன் அமைக்கப்பட்ட தங்குமிடத்தினையும் காண முடிந்தது.

குறித்த பகுதியானது ஆரம்பத்தில் பூவரசன் தீவு என ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்த போதிலும் அப்பகுதி கல்முனை என அழைக்கப்படும் பிரதேசத்தின் கடல் எல்லையில் காணப்படுவதாக மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணையானது அமைந்துள்ள இடம் கடா பிடாரி அம்மன் கோவிலுக்கு செல்லும் பாதை எனவும், குறித்த கோவிலுக்கு சென்று வர முடியாத நிலை காணப்படுவதாகவும் மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

குறித்த பகுதி தாம் பயன்படுத்தி வந்த போக்குவரத்துக்குரிய பகுதி எனவும், அப்பகுதியிலேயே அவர்கள் இவ்வாறு கடலட்டை பண்ணையை அமைத்துள்ளதாகவும் மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதேவேளை, சீன நிறுவனத்தின் ஊழியர்களிடம் குறித்த பண்ணை தொடர்பில் ஊடகவியலாளர்களும், வருகை தந்திருந்தவர்களும் வினவினர்,

குறித்த பகுதியில் கடலட்டை பண்ணையினை அமைப்பதற்கு அப்பகுதி மீனவ சங்கமே அனுமதி அளித்ததாகவும், மாதாந்தம் 1 லட்சம் ரூபாய் பணம் குறித்த சங்கத்திற்கு வழங்க பேச்சுக்கள் இடம்பெற்றிருந்ததாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுவரை குறித்த கடலட்டை பண்ணை பதிவு செய்யப்படவில்லை எனவும், கடல்தொழில் சங்கத்தின் அனுமதியுடனேயே இங்கு பண்ணை அமைக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஏப்ரல் மாதமளவில் குறித்த பண்ணையை அமைத்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். தாம் சீன நிறுவனத்தில் பணி புரிவதாகவும், சீனர்கள் தற்போது இங்கு இல்லை எனவும் குறிப்பிட்ட அவர்கள், தாம் தற்போது பண்ணையில் கடமையில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.

அத்துடன், இதுவரை பண்ணையை அகற்றுவதற்கான அறிவுறுத்தல்கள் எதுவும் தமக்கு கிடைக்கவில்லை எனவும் அவர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

இங்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன்

கௌதாரிமுனை பகுதியில் சீனர் ஒருவரால் அமைக்கப்பட்ட கடலட்டைப்பண்ணையை பார்ப்பதற்காக வந்திருந்தோம்.

குறித்த பகுதி கௌதாரிமுனை கல்முனை பகுதி மக்கள் காலாதிகாலமாக தொழில் செய்து வருகின்ற இடமாக இருக்கின்றது. அவ்வாறு கடல் தொழிலில் ஈடுபடுகின்ற மக்களின் சம்மதம் ஏதும் பெறப்படாமல் கடலட்டை வளர்ப்பதற்கும், அவர்கள் தங்குவதற்கான மிதக்கும் கொட்டகையும் அமைத்துள்ளார்கள். சகல வசதிகளும் அங்கு ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.

அவ்வாறான இடத்திலேயே அந்த சீனர் கடலட்டை வளர்ப்பினை மேற்கொண்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். எந்தவிதமான முறையான அனுமதிகளும் பெறப்படாமல் குறிப்பாக இந்த பிரதேச மீனவர்களின் சம்மதம் இல்லாமல் இந்த இடம் அவர்களிற்கு கடலட்டை வளர்ப்பதற்காக வழங்கப்பட்டுள்ளது.

தேசிய நீரியல் அபிவிருத்தி திணைக்களத்தின் அரியாலையில் இருக்கின்ற ஓர் அலுவலகத்தில் அனுமதி பெறப்பட்டிருப்பதாக தகவல் இருக்கின்றது. ஆனால் எந்தவிதமான ஆவணமும் அவர்களால் காட்டப்படவில்லை.

ஒரு வெளிநாட்டவர் எவ்வாறு இலகுவாக வந்து இந்த இடத்திலே இடத்தை பிடித்து கடலட்டை வளர்க்கின்ற செயற்பாடு இடம்பெறுகின்றது என்பது ஒரு கேள்வியாகின்றது. இதனை சட்டவிரோதமான நடவடிக்கையாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

இது தொடர்பில் உடனடியாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். திஸ்ஸமகரகமவிலே சீன இராணுவத்தினருக்கு ஒப்பான உடையுடன் நின்று வேலைகளில் ஈடுபடுகின்றமை தொடர்பில முறைப்பாடுகள் எழுந்ததை அடுத்து அது தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றது. அது தொடர்பாக விசாரிப்பதாகவும் சொல்லப்பட்டிருக்கின்றது.

ஆனால் இங்கே அது தொடர்பாக ஆட்சேபனைகள் எழுந்திருக்கின்ற போதிலும்கூட அந்த செயற்பாடுகளை நிறுத்துவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts