Ad Widget

சி.வி. கற்பனையில் அரசியல் செய்பவர் – வரதராஜப்பெருமாள்

வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கற்பனையில் அரசியல் செய்வதாக இணைந்த வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தெரிவித்தார்.

அத்தோடு அவர் தமிழ் மக்களின் மாற்று தலைமைக்கு தகுதியானவர் அல்லவெனவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பணத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “வடக்கு மாகாண சபையின் ஆட்சியில் இருந்தபோது முதலமைச்சராக இருந்த நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்களுக்கு எதையும் செய்யவில்லை. கற்பனை அரசியலை செய்துகொண்டு தாம் மாற்றுத் தலைமை என்கின்றார். அதிகாரத்தில் இருக்கும்போது ஆக்கபூர்வமாக எதையும் செய்யாதவர். இந்நிலையில் கட்சியினை தொடங்கி மக்களுக்கு எதை செய்யப்போகின்றார்?

புதிய கட்சி, கூட்டணி என்ற பெயரில் அரசியல் இலாபம் காணவே தவிர மக்களுக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை. தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள், அதிகாரத்துக்கு குரல் கொடுக்க வேண்டும் அதனையே மாற்றுத் தலைமையாக வர விரும்புபவர்கள் முன்னெடுக்க வேண்டும். ஆனால் முன்னாள் முதல்வர் அல்லது அவருடன் கூட்டு வைத்திருப்பவர்கள் கற்பனையில் வாழ்பவர்கள், அவர்கள் கற்பனை அரசியலே செய்து வருகின்றனர்” என தெரிவித்துள்ளார்.

Related Posts