அச்சுவேலி அரச சிறுவர் நன்னடத்தைப் பாடசாலையில் இருக்கும் முல்லைத்தீவு உடையார்கட்டினைச் சேர்ந்த புவனேஷ்வரன் ரகுவரன் (16) என்ற சிறுவன் இன்று வெள்ளிக்கிழமை (04) அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சிறுவன், குற்றச் செயலில் ஈடுபட்டதிற்காக முல்லைத்தீவு நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் கடந்த ஜுன் 30 ஆம் திகதி சிறுவர் நன்னடத்தைப் பாடசாலையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையிலேயே, இச்சிறுவன் இன்று வெள்ளிக்கிழமை இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுவனின் சடலம் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இப்பாடசாலையில் 43 சிறுவர்கள் உள்ளனர் எனவும், குறித்த சிறுவனுடன் சேர்த்து 4 சிறுவர்கள் கடந்த 30 ஆம் திகதி முல்லைத்தீவு நீதிமன்றத்தினால் நன்னடத்தைப் பாடசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக நன்னடத்தைப் பாடசாலை பொறுப்பாளர் வல்லிபுரம் விக்னராஜா தெரிவித்தார்