Ad Widget

சிறீலங்காவின் “மனித உரிமை நடவடிக்கைகள் 2015” அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்கள்!

போரின்போதும் போருக்குப் பின்னரும் குற்றமிழைத்தவர்கள் தண்டனையிலிருந்து தப்பிக்கும் நிலை சிறீலங்காவில் தொடர்கின்றது என அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் கடந்த புதன் கிழமை வெளியிடப்பட்ட ‘சிறீலங்காவுக்கான மனித உரிமை செயற்பாடுகள் – 2015’ அறிக்கையிலேயே இது தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பட்டியலிடப்பட்ட முக்கியமான பிரச்சனைகளில் சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் துன்புறுத்தப்படுதல், விடுதலைப்புலிகளின் அனுதாபிகள் என்று அழைக்கப்படுவோர் தொடர்ச்சியாகக் கைதுசெய்யப்படுதல், தடுத்து வைக்கப்படுதல், சித்திரவதை செய்தல், வல்லுறவுக்குட்படுத்தப்படுதல் மற்றும் சிறிலங்கா படைகள் மற்றும் காவல்துறையினரால் ஏனைய முறைகளில் பாலியல் மற்றும் பாலின அடிப்படையில் வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுதல் என்பனவும் அடங்கியுள்ளன.

சிறைகளில் அளவுக்கு மீறிய கைதிகளின் தொகையினால் சிறைச்சாலையில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது பாரிய பிரச்சனையாகவும் மாறியுள்ளது.

உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களின் மனித உரிமைகள் பிரச்சனையாகவுள்ளது. மற்றும் பெண்கள், குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுதல் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

யுத்தத்தின்போதும் யுத்தத்தின்பின்னரும் குற்றமிழைத்தவர்கள் குறிப்பாக, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள், சித்திரவகைள், பாலியல் வன்முறைகள், ஊழல் மோசடி போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தற்பொழுதும் தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ளும் நிலை பரவலாக நிலவுகின்றது.

சிறிலங்கா அரசாங்கம் ஒரு தொகையான இராணுவம், காவல்துறை மற்றும் ஏனைய அதிகாரிகளை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொலைகள், கடத்தல்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்களின் கொலைகள் உள்ளிட்டவற்றுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில், பழைய மற்றும் புதிய வழக்குகளில் கைது செய்து தடுத்து வைத்துள்ளது.’ என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதேவேளை, இந்த அறிக்கையில், சுதந்திரமாக நடத்தப்பட்ட தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் பதவியில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள இராஜாங்கத் திணைக்களம் சிறிலங்கா அரசாங்கத்தின் பல்வேறு நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி பாராட்டியுள்ளது.

ஓமந்தை சோதனைச்சாவடி மூடப்பட்டமை, சிறிலங்கா அதிபரின் அதிகாரங்களை மட்டுப்படுத்தும், 19ஆவது அரசியலமைப்புத் திருத்தம், ஜெனிவா தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியமை, ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர்கள் மற்றும் குழுவினர், ஐ.நா மனித உரிமை ஆணையாளரை வரவேற்றமை, தேசிய நல்லிணக்கத்துக்கான செயலகம் ஆரம்பிக்கப்பட்டமை, தேசிய கலந்துரையாடல் அமைச்சை உருவுாக்கியமை, காணாமற்போனோருக்கு, காணாமற்போனவர் சான்றிதழை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்தமை, பல்வேறு புலம்பெயர் தமிழர் அமைப்புகள், தனிநபர்கள் மீதான தடையை நீக்கியமை உள்ளிட்ட விடயங்களில் சிறிலங்கா அரசாங்கத்தின் நகர்வுகளை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கை பாராட்டியுள்ளது.

அத்துடன் சிறிலங்கா படைகள், காத்திரமான முறையில் சிவில் அதிகாரிகளால் நிர்வகிக்கப்படுகின்றனர் என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Posts